'அய்யாதுரை' ஆக இருந்த மு.க.ஸ்டாலின்!
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இத் திட்டத்தின்படி அன்று முதல் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்பட்ட 250 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் ஸ்டாலின் பேசுகையில்,
இன்று 250 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
ஒரு மோதிரத்தின் விலை ரூ.1,468 வீதம் ரூ.3.67 லட்சம் மதிப்பில் மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அனைத்து மண்டலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ் பெயர்களை ஆய்வு செய்ய தமிழ் ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தாய்மொழி உணர்வோடு பெயர்கள் சூட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் முழு அளவில் அவ்வாறு சூட்டுவதில்லை. இதை ஊக்கப்படுத்துவதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்த்தும்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று சொல்லத் தவறுவதில்லை.
ஒரு திருமண விழாவில் ஒரு சகோதரி உங்கள் பெயர் மட்டும் தமிழ் பெயரா? என்று கேட்டார். அதே போல் திண்டுக்கல்லில் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒரு மாணவி உங்கள் பெயர் ஸ்டாலின் என்று இருக்கிறதே இது தமிழ் பெயரா? என்று கேட்டார்.
முதல்வர் கலைஞர் எல்லோருக்கும் தமிழ் பெயர்தான் சூட்டுவார். என் மூத்த அண்ணன் மு.க.முத்துவேலர், அடுத்த அண்ணன் மு.க.அழகிரி, அதேபோல் வீட்டின் பேரன் பேத்திகள் பெயரும் தமிழில்தான் சூட்டப்பட்டுள்ளது. எனக்கும் பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும் இணைத்து 'அய்யாதுரை' என்றுதான் பெயர் சூட்ட முடிவு செய்தனர்.
அப்போது ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் மரணம் அடைந்தார். கம்யூனிசத்தின் மீது கொண்ட பற்று காரணமாக தலைவர் கலைஞர் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியிருக்கிறார் என்றார்.