கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல் - வார்டன் கைது
கோவை: கோவை சிறைக்குள் கஞ்சா கடத்திய வார்டனை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னை புழல் சிறைக்குள் கஞ்சா கொண்டு செல்ல முயன்ற தலைமை வார்டன் பிடிபட்டு கைதானார். பின்னர் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கோவை சிறைக்குள் கஞ்சா கடத்திச் செல்ல முயன்று வார்டன் ஒருவர் சிக்கியுள்ளார்.
கோவை மத்திய சிறையில் டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் ஜெயிலர் அன்பழகன் தலைமையில் சிறைக்காவலர்கள் நேற்று மாலை சோதனை நடத்தினர்.
அப்போது 7-வது பிளாக் அருகே ஒரு செருப்பு கிடந்தது. அதில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவுடன் செருப்பு எப்படி சிறைக்குள் வந்தது என்று விசாரித்தபோது, வார்டன் பழனியாண்டி (52) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மற்றொரு செருப்பிலும் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழனியாண்டி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
ஜெயிலர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, வார்டன் பழனியாண்டியை இன்று கைது செய்தார்.
திருச்சியைச் சேர்ந்த பழனியாண்டி, கோவை மாவட்டம் காரமடையில் வசித்துவந்தார். ஆயுள் தண்டனை கைதிகள் சசி, பழனிச்சாமிக்காக செருப்பில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. சசி, பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பழனியாண்டியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications