திமுக நேர்காணலில் ராதிகா செல்வி, கண்ணப்பன்!
பர்கூர், கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் 18ம் தேதி நடக்கிறது.
இதில் திமுக கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் உள்பட 2 தொகுதிகளை காங்கிரஸ் கோரி வருகிறது. இது குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில் திமுக சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று நேர்காணஸ் தொடங்கியது.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் இந்த நேர்காணல் நடத்தினர்.
முதலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நடந்தது. முன்னாள் மத்திய இணையமைச்சர் ராதிகா செல்வி உள்பட பலர் நேர்காணலில் பங்கேற்றனர்.
இதையடுத்து இளையான்குடி தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. முன்னாள் அமைச்சர் தென்னவன், கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் தம்பி ராமையா, சுப.த.சம்பத், சுப.த.இளமாறன், சுப.த. மதியரசன் உள்பட 46 பேர் இந்தத் தொகுதிக்கான நேர்காணலில் ஆஜராகினர்.
அடுத்ததாக கம்பம் தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. இதில் தனது மதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த கம்பம் ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா, ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சீமான் உள்பட 24 பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. அதில் மதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் உள்பட 18 பேர் பங்கேற்றனர்.
இறுதியாக பர்கூர் தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. இதில் 53 பேர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் நேர்காணலில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இன்று நடந்த நேர்காணலில் மொத்தம் 153 பேர் கலந்து கொண்டனர்.
அதிமுக புறக்கணிப்பு-முதல்வர் பதிலளிக்க மறுப்பு:
நேர்காணலுக்குப் பின் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
திமுக, காங்கிரஸ் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும். காங்கிரஸ் 2 தொகுதிகள் கேட்கிறது. தொண்டாமுத்தூரும் கேட்கிறார்கள். அது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
அதிமுக தேர்தல் புறக்கணிப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, பதிலளிக்க முதல்வர் மறுத்துவிட்டார்.