மதுரை திமுக மேயர் கணவரின் பதவி பறிப்பு-எப்.ஐ.ஆர் பதிவு
மதுரை: மதுரையில் உள்ள ஒரு எம்.எல்.எம். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை மிரட்டி அடிக்கடி பணம் பறித்து வந்த மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், திமுகலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதும் அவரது மருமகன் ரமேஷ் மீதும் மோசடி மற்றும் மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல முன்னாள் தலைவராக இருந்தவர் கோபிநாதன். இவர் மேயர் தேன்மொழியின் கணவர். தற்போது 5வது வட்ட பகுதி செயலாளராக இருக்கிறார்.
மதுரை கே.கே.நகரில் ஜிடிஎம் பயர் கிளப் உள்ளது. இந்த கிளப் உறுப்பினர் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் தனது ஆட்கள் சிலரை சேர்க்க வேண்டும் என கோபிநாதன் அடிக்கடி மிரட்டி வந்தாராம். மேலும், அவரது அடியாட்கள் அடிக்கடி நிர்வாக இயக்குநரை மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளனர்.
கோபிநாதன் மற்றும் அவரது மருமகன் ரமேஷ் ஆகியோர் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததால் கொதிப்படைந்த நிர்வாக இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர்.
மேலும், கோபிநாதன் மீதான புகார் மனுவோடு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்து தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை விளக்கினர். முதல்வர் கருணாநிதிக்கும் புகார் மனுவை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அழகிரியின் பரிந்துரையோடு திமுக தலைமைக் கழகம் கோபிநாதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மாவட்டம் 5வது பகுதி கழக செயலாளர் பி.கோபிநாதன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
மதுரை மாநகர் மாவட்டம் 5வது பகுதிக்கழக பணிகள் செவ்வனே நடைபெற எம்.பாண்டியன் பகுதி கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட பகுதி கழக அமைப்பினர் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் கோபிநாதன் மீதான புகாரின் பேரில் குற்றப் பிரிவு போலீஸார் அவரை வரவழைத்து சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீதும் மருமகன் ரமேஷ் ஆகியோர் மீதும் மோசடி மற்றும் மிரட்டல் வழக்குகள் பதிவு செய்தனர்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரைச் சொல்லிக் கொண்டு இதுபோல அடியாள் பட்டாளத்துடன் சிலர், மதுரையில் பலரை மிரட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று மக்கள் புலம்புகின்றனர். அவர்களையும் அழகிரியும் திமுக தலைமைக் கழகம் உரிய முறையில் கவனித்தால் நலமாக இருக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.