மும்பை இரட்டை குண்டுவெடிப்பு-மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு
மும்பை: மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு 3 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவ்ரி பஜார் பகுதிகளில் இரட்டைக் குண்டுவெடிப்புகள் நடந்தன.
இதில், கேட்வே இந்தியா பகுதியில் 50 பேரும், ஜாவ்ரி பஜார் பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என தெரிய வந்தது. டாக்சிகளில் குண்டுகளை வைத்து அவற்றை வெடிக்கச் செய்தனர் தீவிரவாதிகள்.
இந்த சம்பவம் தொடர்பாக முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபீக் அன்சாரி, ஜாகித் யூசுப் பத்னி, ரிஸ்வான் லட்டூவாலா, ஷேக் பேட்டரிவாலா ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான நசீர் என்பவர் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாதுங்கா பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைதான 6 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் நான்கு வழக்குகள் போடப்பட்டன. மொத்தம் 101 சாட்சிகள் இதில் விசாரிக்கப்பட்டனர். கடந்த ஆறு வருடமாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 3 பேர் பொடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
முகம்மது ஹனீப் சயீத், மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபியூக் அன்சாரி ஆகியோரே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் மீது பொடா மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவர்களுக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 4ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications