மாயாவதியை சுற்றி ஜால்ராக்கள்-திக்விஜய் சிங்
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது, மக்கள் எப்படி அவதிப்படுகிறார்கள் என்று எதுவுமே முதல்வர் மாயாவதிக்குத் தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
தாரண மக்களால் முதல்வர் மாயாவதியை சந்திக்கவே முடியவில்லை. அவரைச் சுற்றி அவருடைய ஜால்ராக்கள் தான் இருக்கிறார்கள். மற்ற யாரையும் அவர்கள் நெருங்க விடுவதில்லை.
தனது துதிபாடிகள் என்ன கூறுகிறார்களோ அதைத் தான மாயாவதி செய்கிறார். அறிக்கைகள், கேள்விகளுக்குப் பதில்களைக் கூட இந்த ஜால்ராக்கள் தான் எழுதித் தருகின்றனர். அதைத் தான் மாயாவதி வெளியிடுகிறார்.
அவருக்கு சுயமாக மாநில நிலைமையே தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் இப்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. மின் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. விவசாயம், தொழில், வியாபாரம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
இதையெல்லாம் மாயாவதியிடம் அதிகாரிகள் சொல்வதும் இல்லை. அவராக தெரிந்து கொள்வதும் இல்லை.
கால்நடைகளுக்குக் கூட போதிய தீவனம் இல்லை. இது தொடர்பாக மாவட்ட வாரியாகத் தகவல் திரட்டி உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினால் இந்த வறட்சியைத் தேசிய பேரழிவாக அறிவித்து உடனடியாத மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். நிவாரண உதவிகளை அளிக்க முடியும்.
ஆனால், இதைச் செய்தால் தனது அரசின் செயலி்ன்மை வெளியில் தெரிந்துவிடும் என்று அமைதி காக்கிறார் மாயாவதி.
மாயாவதிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. வெற்று அரசியல் சண்டையிலும் சிலை வைப்பதிலுமாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.
சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை உடனே அனுப்பி வைக்குமாறு தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கோரிக்கையை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்னரே விடுத்திருக்க வேண்டும். இப்போது பயிர் வளர்ச்சியே ஸ்தம்பித்துப் போனதும் கேட்கிறார்.
தன்னுடைய அரசின் சாதனைகளைத் தொகுத்து புத்தகமாக காங்கிரஸ் எம்பிக்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக மாயாவதி கூறியுள்ளார். அனுப்பி வைக்கட்டும். அவருடைய ஆட்சியின் வேதனைகளைத் தொகுத்து நாங்களும் புத்தகம் தயாரித்து அவருக்கு அனுப்புவோம் என்றார் திக்விஜய் சிங்.