மீண்டும் காத்திருப்பில் கோவை கமிஷனர் சிவனாண்டி

அதிமுக ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட அதிமுககாரர் போலவே செயல்பட்டார் சிவனாண்டி என்பது அப்போது எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்காக வாக்கு சேகரிக்கும் அளவுக்கு இறங்கி சர்ச்சையிலும் சிக்கினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருப்படியான பதவியில் அவர் அமர வைக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் ஆளுங்கட்சியின் நல்லெண்ண வட்டத்திற்குள் அவர் வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு அவர் கோவை போலீஸ் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்து கோவை மக்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்.
முதல் தகவல் அறிக்கையை வீடு தேடி போலீஸாரே வந்து தருவது, ஆதரவற்ற குழந்தைகளை போலீஸாரே தத்தெடுத்து வளர்ப்பது என அசத்தலாக பணியாற்றி வந்தார் சிவனாண்டி.
இந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது இடைத் தேர்தல். தொண்டாமுத்தூர் தொகுதியின் பல பகுதிகள், கோவை மாநகர எல்லைக்குள் வருகிறது. இந்த நிலையில், சிவனாண்டியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து சிவனாண்டி மாற்ற்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆணையர் பொறுப்பை மேற்கு மண்டல ஐஜி பிரமோத் குமார் தற்காலிகமாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கும், சிவனாண்டிக்கும் இடையே கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலிருந்தே டக் ஆப் வார் நடந்து வருகிறது.
அந்த தேர்தலின்போது அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என்ற புகாரைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் இனிமேல் தேர்தல் தொடர்பான பணிகளின்போது சட்டம், ஒழுங்கை கவனிக்கும் பொறுப்பில் சிவனாண்டி இருக்கவே கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
கடந்த ஆண்டு லோக்சபாத் தேர்தலுக்கு முன்பாக கோவை டிஐஜியாக நியமிக்கப்பட்டார். ஆனால் லோக்சபாத் தேர்தலைக் காரணம் காட்டி அவர் மாற்றப்பட்டு ரயில்வே டிஐஜியாக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் கோவைக்கு கமிஷனராக மாற்றப்பட்டு கடந்த ஜூன் 4ம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில் இப்போது இடைத் தேர்தல் குறுக்கிட்டுள்ளதால் மறுபடியும் மாற்றப்பட்டு விட்டார் சிவனாண்டி.
இப்போது மாற்றப்பட்டாலும் கூட தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கோவை ஆணையராக சிவனாண்டியே பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications