கோவை கிளப்களில் ரெய்டு- கஞ்சா சிக்கியது
கோவை: கோவையில் அதிகாலையில் பொழுதுபோக்கு கிளப்களில் நடந்த அதிரடி சோதனையில் 900 கிராம் கஞ்சா சிக்கியது. 2 கிளப்களின் உரிமையாளர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை புறநகர்ப் பகுதியில் உள்ள ராயல் கிளப் மற்றும் கிளாசிக் கிளப் ஆகியவற்றில் அதிகாலையில் போலீஸார் திடீர் சோதனையை நடத்தினர்.
இந்த கிளப்களில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. ஏராளமான தொழிலதிபர்கள் இந்த கிளப்களுக்கு வருவது வழக்கம்.
ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு வந்து சூதாடி ரூ. 7 லட்சம் பணத்தை இழந்த நடராஜ் என்ற செங்கல் சூளை அதிபர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த கிளப்களில் சூதாட்டம் மூலம் கிடைக்கும் பணத்தை கிளப் அதிபர்கள் அதிக வட்டிக்கு விட்டு வந்ததும், பணம் இல்லாமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் நகைகளை கட்டாயமாகப் பறித்து அடகு வைத்துப் பணத்தைப்பெறுவதும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மது சப்ளையையும் இவர்கள் செய்து வந்தனற்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 900 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து இரு கிளப்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள், சூதாடியவர்கள் என 45 பேர் சிக்கினர்.