குற்றாலம் மலையில் மீண்டும் பயங்கர தீ!
குற்றாலம்: குற்றாலம் மலையில் பயங்கர தீ பிடித்தது. தீயை அணைக்க வனகத்துறையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் மலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது.. மெயினருவி பகுதியில் இருந்து புலியருக்கு செல்லும் வழியில் மாலை சுமார் 6 மணிக்கு தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவி எரிந்தது. இதனால் ஏராளமான செடிகள், மரங்கள் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கோட்டை வனச்சரகர் சாமுவேல் ராஜன் உத்தரவின் பேரில் வனவர் தார்சிஸ், வெள்ளத்துரை, ஆகியோர் தலைமையில் 40 பேர் மலைக்கு சென்று தீயை அணைக்க நீண்ட நேரமாக போராடினர்.
இதுகுறித்து வனச்சரகர் சாமுவேல் ராஜன் கூறுகையில் மலைப்பகுதியில் யாராவது புகை பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டு இருக்கலாம் என்றும் தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் குற்றாலம் சிற்றருவிக்கு குளிக்கச் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்து கேட் போட்டு இருக்கின்றனர். வனத்துறையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என குற்றாலம் சாரல் தொடக்க விழாவில் எம்எல்ஏக்கள் மேடையில் குற்றம்சாட்டிய மறுநாளே மலைப்பகுதியி்ல் தீ பிடித்து விடிய விடிய தீ கொளுத்து விட்டு எரிந்து வருவது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அடிக்கடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடிக்கடி தீ பிடித்து ஏராளமான மரங்கள், செடிகள், அரிய வகை மூலிகைகள் அழிந்து வருவதற்கு வனத்துறை, பொதுமக்கள்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டுவதும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.