2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெரும் ஊழல்!-பாஜக
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இது குறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் ஊழல் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் ரூ. 1,651 கோடிக்கு லைசென்ஸ் பெற்று அதை வெளிநாட்டு நிறுவனத்துக்கு மிக அதிக தொகைக்கு விற்றுள்ளன. யுனிடெக் நிறுவனம் 67 சதவீத பங்குகளை ரூ. 6,120 கோடிக்கு நார்வேயைச் சேர்ந்த டெலினோர் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. இதிலிருந்தே நிர்ணயிக்கப்பட்ட தொகை மிகக் குறைவு என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.
மார்க்சிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி பேசுகையில், இரண்டு நிறுவனங்கள் ரூ. 1,651 கோடிக்கு லைசென்ஸ் பெற்று தங்களது பங்குகளை ரூ. 10,000 கோடிக்கு வி்ற்றுள்ளன. இதிலிருந்தே முறைகேடு நடந்திருப்பது தெளிவாகப் புரிகிறது. கட்டணத்தை மிகக் குறைவாக நிர்ணயித்ததன் பின்னணி என்ன என்றார்.
மார்க்சி்ஸ்ட் எம்பி பிருந்தா காரத் பேசுகையில், இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா பதிலளிக்கையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விற்பனை மூலம் இதுவரை அரசுக்கு ரூ. 68,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2007-08ம் ஆண்டில் மட்டும் ரூ. 23,000 கோடி வருவாய் கிடைத்தது.
2001ம் ஆண்டிலேயே 2ஜி லைசென்ஸ் கட்டண விகிதம் மிகவும் நியாயமானதாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. தொலைபேசி உபயோகிப்பு அதிகரிக்கும்போது ஆண்டுக்கு 10 சதவீத அளவுக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அப்போது பரிந்துரைக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டே லைசென்ஸ் கட்டணம் ரூ. 1,651 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கட்டண விகிதத்தை நிர்ணயித்ததே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தான். இந்த கட்டண விகிதத்தை உயர்த்தலாம் என டிராய் பரிந்துரைத்தால் உடனே உயர்த்தவும் அமைச்சகம் தயங்காது என்றார்.
அப்போது பேசிய அருண் ஜேட்லி, 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட தொகை 2007-ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்படாதது ஏன்?. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு தடையாக இருந்தது எது?. லைசென்ஸ் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு அதை ரத்து செய்வது தான் இதற்கு ஒரே தீர்வு என்றார்.
இதற்கு பதிலளித்த ராசா, டிராய் பரிந்துரைத்த தொகையின்படி லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில் லைசென்ஸ் அளிக்கப்பட்டது. அருண் ஷோரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது 51 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது.
தொலைத் தொடர்பு கொள்கை வரையறுக்கப்படுவதற்கு முன்பு ஏலம் மூலம் விடப்பட்டதில் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்தே வருவாயில் பங்கு என்ற நடைமுறையை அரசு கொண்டுவந்தது.
தற்போது லைசென்ஸ் பெறும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தங்கள் நிறுவனப் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்கக் கூடாது என்ற விதிமுறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது போடப்பட்டுள்ளது என்றார்.
அருண் ஜேட்லி தொடர்ந்து பேசுகையி்ல், இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்தால் பிரதமர் வாய்மூடி மெளனமாக உள்ளார். கடந்த காலத்தில் கிடைத்த அனுபவத்தின் காரணமாகத் தான் 3ஜி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார் என்று கூறிய 2 ஜி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி பாஜக எம்பிக்களுடன் வெளிநடப்பு செய்தார்.