ராணுவ வாகன தாக்குதல்-பெரியார் தி.க. பொது செயலாளர் விடுதலை
சென்னை: கோவையில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் தி.க. மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த மே 2ம் தேதி கோவையில் பெரியார் தி.க. போராட்டம் நடத்தியது. அப்போது அந்த வழியாகச் சென்ற இந்திய ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக பெரியார் தி.க. மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 46 பேர் மீது கோவை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
இதில் ராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் அடைத்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ராமகிருஷ்ணன் மனைவி வசந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹேபியஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு) மனுதாக்கல் செய்தார்.
அதில் எனது கணவரை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளனர். அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி முகோபாத்யாயா, நீதிபதி ராஜ இளங்கோ ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், கோவை போலீஸ் கமிஷனர் தனது மனதை சரியாக செலுத்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிறப்பிக்கவில்லை. எனவே ராமகிருஷ்ணன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.