ஹூண்டாய் ஸ்டிரைக் ஓவர்!
சென்னை: ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் ஹூண்டாய் நிர்வாகம் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ளனர் தொழிலாளர்கள்.
சம்பள உயர்வில் உடன்பாடில்லாததால் உள்ளிருப்புப் போராட்டத்தை கடந்த சில தினங்களை மேற்கொண்டு வந்தது சிஐடியூ ஆதரவு பெற்ற ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர் யூனியன். இந்தப் பிரச்சினை சுலபத்தில் தீராததால் கதவடைப்பு முடிவை அறிவிக்கப் போவதாக நேற்று தெரிவித்தது ஹூண்டாய் நிர்வாகம்.
அதற்குள் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் நிர்வாகத்துக்கும் நேற்று உடன்பாடு கையெழுத்தானது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் நிர்வாக இயக்குநர் எச்எஸ் லீம், பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்தது என்றும், இனி இத்தகைய சூழல் ஏற்படாது என்றும் கூறினார். இந்த விஷயத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் நீக்கப்பட்ட தொழிலாளர்களில் உடனடியாக 20 பேரை பணியில் சேர்த்துக் கொள்ள நிர்வாகம் சம்மதித்துள்ளதாக தொழிலாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.