உமர் குற்றமற்றவர்: சிபிஐ, ப.சிதம்பரம்
டெல்லி: சோபியான் பாலியல் வழக்கில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சிபிஐ தெரிவித்துள்ளது.
பாலியல் வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீது 9 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் உமர் அப்துல்லாவின் பெயர் இல்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
யார், யாருடைய பெயர்கள் குற்றப் பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் உள்துறை அமைச்சகத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது என்று சிபிஐ கூறியுள்ளது.
உமர் தவறு செய்யவில்லை-ப.சிதம்பரம்:
அதே போல உமர் அப்துல்லாவுக்கும் இந்த பாலியல் விவகார வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். அவர் கூறுகையில், உமர் மீது எந்தத் தவறும் இல்லை என்ற விவரம் ஆளுநர் என்.என்.வோராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
உமருக்கு காங். ஆதரவு..
இந்த விவகாரத்தில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உமர் அப்துல்லாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
தவறான குற்றச்சாட்டைக் கூறி ஒரு இளம் முதல்வரை பதவி விலகும் அளவுக்கு வெறுப்பேற்றியுள்ளனர் எதிர்க் கட்சிகள் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கூறினார்.
செக்ஸ் விவகாரம்: மெஹ்பூபா கட்சியினர் கைது..
இதற்கிடையே இந்த செக்ஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மேலும் இரு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகியோரை கைது செய்யவுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே மெஹ்பூபாவின் தந்தையான முப்தி முகம்மத் சயீத் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இரு அமைச்சர்கள், இந்தக் கட்சியின் ஆட்சியில் பதவியில் இருந்த ஒரு முதன்மைச் செயலாளர் ஆகியோரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் மேலும் 2 மாஜி அமைச்சர்களும் தலைமைச் செயலாளரும் கைதாகவுள்ளனர். இதனால் தான் உமர் அப்துல்லா மீதே செக்ஸ் குற்றச்சாட்டை அந்தக் கட்சி முன் வைத்துள்ளது.
சட்டசபையில் இன்றும் அமளி..
இதற்கிடையே காஷ்மீர் சட்டசபையில் இன்றும் 3 வது நாளாக எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. உமர் குற்றமற்றவர் என்று சிபஐ வெளியிட்ட அறிக்கையை சட்டசபையில் கிழித்து எறிந்த மெஹ்பூபா, இந்த விவகாரத்தில் காங்கிரஸ்-உமரின் கைக்கூலியாக சிபிஐ செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை ஆளுநர் வோரா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் உமர் அப்துல்லா இன்று சட்டசபைக்கு வரவில்லை.