துபாயிலிருந்து சென்னை வந்த தொழிலாளிக்கு ஸ்வைன்
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த கட்டிட தொழிலாளிக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். இதற்காக கடந்த 4 மாதங்களாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய-மாநில அரசுகளின் டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் பயணிகளிடம் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில் துபாயில் இருந்து வந்த கடலூரை சேர்ந்த பெரியசாமி (32) என்ற கட்டட தொழிலாளிக்கு கடுமையான சளி மற்றும் காய்ச்சலுடன் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது.
இதையடுத்து அவர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்த மாதிரிகள் டெல்லியில் உள்ள மத்திய மருத்துவ பரிசோதனைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவைப் பொறுத்து அவருக்கு சிகிச்சை தீவிரமாக்கப்படும்.