சென்னை ஏர்போர்ட்டில் 'வாக்கலேட்டர்'-நாட்டிலேயே முதல் முறை
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் வாக்கலேட்டர் (பக்கவாட்டு எஸ்கலேட்டர்) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இம்மாதத்தில் இந்த வாக்கலேட்டர் விமான நிலையத்திற்கு உள்ளே தொடங்கப்படுகிறது.
இது கன்வேயர் பெல்ட் போன்றது. வழக்கமாக கன்வேயர் பெல்ட்களில் பயணிகளின் உடமைகளைக் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் பயணிகளை அழைத்துச் செல்லும் பக்கவாட்டு எஸ்கலேட்டர்கள் இந்தியாவில் இதுவரை இல்லை. ஆனால் பல வெளிநாட்டு விமான நிலையங்களில் இது சாதாரணமாக காணப்படும்.
இந்த வாக்கலேட்டர்கள், ஏரோ பிரிட்ஜுகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்த வாக்கலேட்டர்களைப் பயன்படுத்தி பயணிகள் விமானம் இருக்கும் இடத்தை அடையலாம். மேலும், விமான நிலைய முனையத்திற்குள் நடக்கும் நேரத்தை பயணிகள் மிச்சப்படுத்தலாம்.
சென்னை விமான நிலையத்தில் இந்த வாக்கலேட்டர் ரூ. 7 கோடியில் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் 5 ஏரோ பிரிட்ஜுகளும், உள்நாட்டு முனையத்தில் 3 ஏரோ பிரிட்ஜுகளும் உள்ளன.
வாக்கலேட்டர் அறிமுகம் குறித்து விமான நிலைய இயக்குநர் கே.நடராஜன் கூறுகையில், பகுதி பகுதியாக இந்த வசதி செய்யப்படவுள்ளது. முதல் பிரிவு வாக்கலேட்டர், ஆகஸ்ட் மத்தியில் தொடங்கப்படும்.
முனையங்களுக்கு இடையிலான காரிடார்களை இணைக்கும் வகையில் முதல் யூனிட் வாக்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தூரம் 300 மீட்டராகும்.
அடுத்த கட்டமாக 48 மீட்டர், 24 மீட்டர், 30 மீட்டர் என்ற அளவில் 3 வாக்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளதாம்.
இந்தியாவிலேயே வாக்கலேட்டர்களை பெற்றுள்ள முதல் விமான நிலையம் சென்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.