நமது நிலையில் மாற்றமில்லை - ஆனால் பாக்.குடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை: மன்மோகன்

Subscribe to Oneindia Tamil

Manmohan singh
டெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக அண்டை நாட்டுடன் (பாகிஸ்தான்) பேசுவதைத் தவிர நம்மிடம் மாற்று வழி ஏதும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஜூலை 16ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தங்களது மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் உறுதிபடக் கூறியுள்ளது. இதை அது உறுதியுடன் கடைப்பிடித்தால் மட்டுமே அவர்களுடன் நாம் அர்த்தப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும்.

இதுதொடர்பான நமது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மும்பை போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடந்தால் அது இரு நாட்டு உறவுகளின் மீது கறையாக படிந்து விடும்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை அஜென்டாவிலிருந்து தீவிரவாதத்தை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கும், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் நினைத்து விடக் கூடாது.

அரசியல் துணிச்சலுடன் பாகிஸ்தான் செயல்பட வேண்டும். தனது நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் பாகிஸ்தானால் கிழக்குப் பிராந்தியத்திலும் (இந்தியாவுடனான எல்லை) ஏன் தீவிரமாக செயல்பட்டு அவர்களை ஒடுக்க முடியாது..

பாகிஸ்தானை ஏன் நாம் நம்ப வேண்டும் என்று பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா கேட்டார். இந்த நேரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகன் சொன்னதை நினைவு கூற விரும்புகிறேன். அண்டை நாடுகளை நம்புங்கள், அதேசமயம், கவனத்துடனும் இருங்கள் என்றார்.

நாம் போரை விரும்பாவிட்டால் பேச்சுவார்த்தையை மட்டுமே நம்பியாக வேண்டும்.

பாகிஸ்தான் அரசு முதல் முறையாக தனது நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல மாற்றம்.

நான் எகிப்து கிளம்புவதற்கு முன்பு டெல்லியில் என்னிடம் வந்து சேர்ந்த பாகிஸ்தான் அரசின் விளக்க அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பி்ல மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த முன்னேற்றங்கள், விவரங்களை பாகிஸ்தான் நம்மிடம் இதுபோல தெரிவிப்பதும் இதுவே முதல் முறையாகும்.

பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்ள இதற்கு முன்பு இருந்த இந்திய அரசுகள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணை, கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரம், முதல் தகவல் அறிக்கை விவரங்கள், அதுதொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் பாகிஸ்தான் நம்மிடம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமே இல்லாமல், லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் மும்பை தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியதாகவும் பாகிஸ்தான் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் இவையெல்லாம் போதுமானது அல்ல. மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சதிகாரர்கள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும். அதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்படும் அனைத்து தீவிரவாத குழுக்களும் ஒழிக்கப்பட வேண்டும்.

நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்தபோது மும்பைத் தாக்குதல் தொடர்பான இந்தியாவின் கவலைகளையும், இந்திய மக்களின் கோபத்தையும் கடுமையான வார்த்தைகள் மூலம் தெளிவுபட விளக்கினேன்.

வாஜ்பாய் துணிச்சல்காரர்..

1999ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் லாகூர் செல்ல முடிவெடுத்தது அவரது அரசியல் துணிச்சலைக் காட்டியது. அவரது முடிவு அரசியல் பூர்வமாக சிறப்பு வாய்ந்தது. இதுபோன்ற தைரியமான முடிவுகளை எடுக்க சிறந்த தலைவர்களால்தான் முடியும்.

1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போதும் சரி, 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலின்போதும் சரி, வாஜ்பாய் மிகவும் திறமையாக அதை கையாண்டு, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவே முயன்றார்.

ஒரு சிறந்த தலைவராக, தனது முடிவுகளில் அவர் எந்த தடுமாற்றத்தையும் சந்திக்கவில்லை. இது பாராட்டுக்குரியது.

2004ம் ஆண்டு அவர் இஸ்லாமாபாத் சென்றபோது, இரு தரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அவரது இந்த துணிச்சலான நடவடிக்கைகளை அப்போதைய எதிர்க்கட்சிகள் ஒரு மனதாக வரவேற்றன என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்த விஷயத்தில் வாஜ்பாயின் கருத்துக்களையே நான் எதிரொலிக்கிறேன், பகிர்ந்து கொள்கிறேன். மேலும் பாகிஸ்தானுடனான உறவுகளை கையாளுவதில் அவர் பட்ட சிரமங்களையும், விரக்தியையும் நான் புரிந்து கொண்டுள்ளேன் என்றார் பிரதமர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+