5 தொகுதிகளில் 121 பேர் வேட்பு மனு தாக்கல் - இன்று பரிசீலனை
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் 121 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு, வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
5 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
5 தொகுதிகளிலும் மொத்தம் 121 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தொண்டாமுத்தூரில் அதிகபட்சமாக 34 பேரும், பர்கூரில் 24 பேர், கம்பத்தில் 23 பேர், ஸ்ரீவைகுண்டத்தில் 22 பேர், இளையாங்குடியில் 18 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.