தென்னக ரயில்வேயின் சிறந்த நிலையம் மதுரை!
மதுரை: தென்னக ரயில்வேயில் மதுரை ரயில் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரை வந்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கார்மிலஸ் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.12 கோடி செலவில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. அதில் ரூ.5 கோடியில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட உள்ளது.
இவை தவிர தானியங்கி கார் பார்க்கிங் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் புஷ் அன்ட் புல் ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தொடர்ந்து ஏழைகள் ரதம் ரயில் இயக்கப்படும். மதுரை- திண்டுக்கல் 2வது அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்பட்ட இந்த ரெயிலின் வேகம் 90 கிலோமீட்டராக உயர்த்தப்படும்.
வருகிற 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மதுரை- சென்னை இடையேயான ரயில் பாதை மின் மயமாக மாற்றப்படும். தென்னக ரயில்வேயில் மதுரை ரயில் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணியில் அகலம் குறைவாக காணப்படும் 1வது பிளாட்பாரம் 6 மீட்டரில் இருந்து 9 மீட்டராக மாற்றப்படும்.
அதேபோல் ஜனதா சாப்பாடு பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் இருந்து மதுரை வரும் பொழுது அடிக்கடி ஏற்படும் தண்டவாள விரிசல் கால நிலை மாறுபாட்டால் நிகழ்கிறது. அந்த குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் மகளிர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பீச் முதல் தாம்பரம் வரையிலும், அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி வரையிலும் தினமும் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும்.
இந்த மகளிர் சிறப்பு ரயிலை வருகிற 5ம் தேதி மத்திய ரயில்வே மந்திரி மம்தா பானர்ஜி சென்னையில் துவக்கி வைக்க உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications