எழும்பூரில் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்: அரிவாள் வெட்டு-ரணகளமான பஸ்
சென்னை: எழும்பூரில் ரயில் நிலையத்தில் பஸ்சுக்குள் நுழைந்து கல்லூரி மாணவர்களை எதிர்கோஷ்டி கல்லூரி மாணவர்கள் அரிவாள்கள், உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில் பஸ் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் பயணித்த 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சோடா பாட்டில்கள் மற்றும் கல்வீச்சு தாக்குதலில் அந்தப் பகுதியே ரணகளமானது. இவர்களது சண்டையில் அப்பாவிப் பொது மக்களும் பயணிகளும் சிக்கி சீரழிந்தனர்.
இச்சம்பவம் காரணமாக எழும்பூர் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.
இன்று காலை சென்னை பாரிமுனையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் செல்லும் 15பி பஸ் எழும்பூர் ரயில் நிலைய பஸ் நிலையத்துக்கு வந்தபோது அங்கு பதுங்கியிருந்த 30 பேர் கொண்ட கும்பல் கத்திகள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் பஸ்சைத் தாக்கியது.
கண்ணாடிகளையும் உடைத்த அக் கும்பல் பஸ்சுக்குள் ஏறி அதில் அமர்ந்திருந்த சுமார் 20 கல்லூரி மாணவர்களை குறி வைத்து அரிவாள்களால் வெட்டியது. பிற பயணிகளையும் உருட்டுக் கட்டையால் தாக்கினர்.
சோடா பாட்டில்கள் மற்றும் கற்களால் பேருந்தை தாக்கினர். இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
தாக்குதலையடுத்து பஸ்சில் இருந்து இறங்கி ஓடிய மாணவர்களை எதிர் கோஷ்டி மாணவர்கள் விடாமல் விரட்டிச் சென்றும் தாக்கினர்.
இந்த பயங்கர தாக்குதலில் பச்சையப்பா கல்லூரி மாணவர் சுரேஷ் (19), மற்றும் பிரேம்குமார் (20), கார்த்திக் (21), தேவராஜ் (20), நித்யானந்தம் (19), நிஷாந்த் (19), செல்வம் (20), பயணிகளான செந்தில்குமார், சாங்சிங் ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆவர்.
தகவல் அறிந்து போலீசார் ஓடி வந்து சம்பவ இடத்தில் கிடந்த ஒரு பையை பறிமுதல் செய்தனர். இது தாக்குதல் நடத்திய கும்பல் விட்டுச் சென்ற பையாகும்.
அதில் நோட்டு புத்தகமும், அரிவாளும் இருந்தது. இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் மாணவர்கள் என்று தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இது மாணவர்களின் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதல் என்று தெரியவந்துள்ளது.