திமுகவில் இணைந்தார் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2 நாட்களுக்கு முன்பு அவரை அப்பொறுப்பிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. நேற்று திடீரென கட்சியை விட்டும் அனிதாவை நீக்கினார் ஜெயலலிதா.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா அவசர கோலத்தில் எடுத்த முடிவு இது என்று கூறியிருந்தார் அனிதா. அவர் திமுகவில் சேர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதியை மாலையில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அனிதா.
ஜெ.வின் அவசர கோல முடிவு...
முன்னதாக திருச்செந்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கி இருப்பது அவசர கோலத்தில் எடுத்து முடிவாகவே நான் கருதுகிறேன். இந்த முடிவு நான் எதிர்பார்க்காத நடவடிக்கையாகும். அ.தி.மு.க. கட்சியில் அடிக்கடி தவறான முடிவுகள் எடுப்பது வழக்கமாகிவிட்டது.
சில முக்கிய பிரமுகர்களின் நெருக்கடியாலும், தொல்லைகளாலும் நேற்று முன்தினம் நான் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
இதுவரை எம்.ஜி.ஆர். கண்ட இயக்கத்திற்கோ, அல்லது எனக்கு ஓட்டுபோட்ட மக்களுக்கோ, நான் எந்த துரோகமும் செய்யாமல், தொய்வில்லாமல் மக்கள் பணி செய்து வந்தேன்.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருந்து தொகுதி மக்களுக்கு என் கடமையை தொடர்ந்து செய்வேன் திருச்செந்தூர் தொகுதி மட்டும் அல்ல, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களிடம் கேட்டால் என் செயல்பாடுகள் குறித்து சொல்வார்கள்.
எனக்கு ஓட்டுபோட்ட எனது தொகுதி மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அதன்பின்னர் எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பேன்.
இந்த முடிவு அவசர கோலத்தில் எடுத்த முடிவு. இந்த முடிவை எடுத்தவர்களே பின்னால் வருத்தப்படுவார்கள் என்றார் அவர்.