போலீஸாரை தாக்கி தப்பி ஓடிய ரவுடி சுட்டுக் கொலை
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே போலீஸாரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த குன்னூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் சுந்தரமூர்த்தி(37). இவர் ஒரு ரவுடி.
இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என பல வழக்குகள் உள்ளன. இவரை விளாம்பட்டி ரோட்டில் உள்ள கல்மண்டபம் அருகே சுற்றி வளைத்து பிடித்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு விருதுநகர் சிறையில் அடைக்க ஆட்டோவில் போலீஸ்காரர்கள் காமராஜ், சிவா ஆகியோர் அழைத்து வந்தனர்.
அப்போது ஆட்டோ, சிவகாசி இரட்டைப்பாலம் அருகே வந்தபோது, கைதி சுந்தரமூர்த்தி போலீஸ்காரர் காமராஜை முகத்தில் குத்திவிட்டு அவர் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினான்.
சுதாரித்துக் கொண்ட போலீஸ்காரர் சிவா துரத்திச் சென்று சுந்தரமூர்த்தியைப் பிடித்தார். பிறகு, கைதியின் கையில் இருந்த துப்பாக்கியை போலீஸ்காரர் பறித்துக் கொண்டார்.
ஆனாலும் விடாத சுந்தரமூர்த்தி அவரின் பிடியிலிருந்து நழுவி தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீஸ்காரர் காமராஜ் தனது துப்பாகியால், சுந்தரமூர்த்தி மீது 2 ரவுண்டு சுட்டார்.
இதில் ரத்தவெள்ளத்தில் சுந்தரமூர்த்தி கீழே விழுந்தார். உடனடியாக அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சுந்தரமூர்த்தி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications