அமெரிக்காவில் ராஜா மாதிரி இருந்த டெக் ஊழியர்கள்.. இந்தியாவில் வேலைக்காக பல்டி அடித்து வருகின்றனர்.. ஏன்?!
ஒருகாலத்தில் அமெரிக்காவில் வேலை பெறுவது இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சூழல் மாறிவிட்டது. அமெரிக்காவில் மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட்அப் முதல் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், இந்தியாவிலும் அவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பது கடினமாகியுள்ளது.
ஏஐ மூலம் பல முக்கிய பணிகள் ஆட்டோமேட் செய்யப்படுவதாலும், நிறுவனங்கள் கூடுதல் செலவுகளை ஏற்க மனமில்லாத நிலையில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கு ஏஐயில் பயிற்சி கொடுத்து வேலைகளை செய்ய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தோருக்கு அதிகப்படியான சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துவது கடினமாகி வருகிறது.

2026-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இருந்து சுமார் 7,300 இந்திய டெக் ஊழியர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். 2025-ல் இந்த எண்ணிக்கை 15,100 ஆகவும், 2024-ல் 9,700 ஆகவும் இருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் புதிதாக பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
அமெரிக்காவில் தொடர்ந்து பணிநீக்கம் நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை. இதற்கு பல காரணம் கூறப்படுகிறது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மந்தநிலை
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது கடுமையான மந்தநிலையை சந்தித்து வருகிறது. நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிப்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. ஜூன் மாதத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பணியமர்த்தல், கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்றால் பாதுக்கோங்க நிலைமை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை.
இதற்கு உலகளாவிய பொருளாதார மந்தநிலை, செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பணிகள் தானியங்கி மயமாக்கப்படுவது ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த சூழலில், அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஊழியர்களுக்கு வேலை கிடைப்பது மேலும் கடினமாகியுள்ளது.
அமெரிக்காவில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்குக் கூட இந்தியாவில் உடனடியாக வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. நிறுவனங்கள் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நியமிப்பதில் தயக்கம் காட்டுகின்றன. மேலும், பல நிறுவனங்கள் தற்போது புதிய பணியமர்த்தலை குறைத்துள்ளன.
இதனால், அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற வேலையை உடனடியாக பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராக இருந்தாலும், வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஜி.சி.சி. நிறுவனங்கள்
வேலைவாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக குறைந்திருந்தாலும், சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் உலகளாவிய திறன் மையங்களும் (GCC) மூத்த நிர்வாகிகளை ஒப்பந்த அடிப்படையில் 'பிராக்ஷனல் சி.எக்ஸ்.ஓ.' (Fractional CXO) பதவிகளில் நியமித்து வருகின்றன. இது தற்காலிக தீர்வாக இருந்தாலும், அனைவருக்கும் இது பொருந்தாது.
பலர் தங்கள் திறமைக்கு ஏற்ற முழுநேர வேலையை தேடி வருகின்றனர். ஆனால் தற்போதைய சந்தை நிலவரம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக இருந்தது. ஆனால் தற்போது மந்தநிலையை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்கள் சொந்த நாட்டிலும் வேலை பெற முடியாமல் தவிப்பது, இந்திய வேலைவாய்ப்பு சந்தையின் மோசமான நிலையை காட்டுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்களுக்கு வேலை கிடைப்பது மேலும் கடினமாகும் என்று துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பிரஷ்ஷர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications