பெண் தாசில்தார் வீட்டில் தோண்ட தோண்ட கிடைத்த தங்கம், வைரம், பணம்.. தெலங்கானாவை அதிரவிட்ட சுசரிதா!
ஹைதராபாத் அருகே உள்ள ஷாமிர்பேட் பகுதியில் தாசில்தாராகவும், இணை சார்பதிவாளராகவும் பணியாற்றிய சுசரிதா, ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்த லஞ்ச வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு அமைப்பு (ACB) அதிகாரிகள் அவரது வீடு மற்றும் உறவினர்கள், பினாமிகள் பெயரிலான இடங்களில் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அதிர வைக்கும் வகையில் மிகப்பெரிய அளவிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லஞ்ச வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த சுசரிதா-வுக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு அமைப்பு செய்த சோதனையில் சித்திபேட் பகுதியில் 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஹைதராபாத்தில் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு நில மனைகள், ஒரு வோல்க்ஸ்வேகன் கார் மற்றும் ஒரு ஹூண்டாய் கிரெட்டா கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.38 லட்சம் வங்கி வைப்புத் தொகை உள்ளிட்டவையும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கண்டறியப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5.05 கோடியாக உள்ளது.

இந்தச் சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சொத்துகள் அனைத்தும் அவரது வருமானத்துக்கு ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சுசரிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக (Disproportionate Assets) புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பணிக்காலத்தில் சட்டவிரோத வருமானம் ஈட்டி, பல்வேறு பெயர்களில் சொத்துகளை வாங்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் லஞ்ச வழக்கு மட்டுமின்றி, சொத்து முறைகேடு தொடர்பான வழக்கிலும் அவர் சிக்கியுள்ளார். இதனால் சுசரிதா-வுக்கு தொடர்புடையவர்களை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை கண்டறியப்பட்ட சொத்துகள் மட்டுமின்றி, உறவினர்கள் அல்லது பினாமிகள் பெயரில் கூடுதல் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஒரு தாசில்தார் வீட்டில் இவ்வளவா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த சம்பவம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications