கோவை எடிசனுக்கு ஜெர்மனி தந்த மெகா அங்கீகாரம்.. புறக்கணித்த இந்தியா! ஜி.டி. நாயுடுக்கு வரலாற்று அநீதி
கோவை: நமது திறமைகளை உலகம் அங்கீகரிக்கும் வரை காத்திருந்து, அதற்குப் பிறகு அவர்களைக் கொண்டாடும் ஒரு மோசமான வழக்கம் நம் நாட்டில் எப்போதும் இருந்து வருகிறது. பிற நாடுகள் பாராட்டும் வரை நம் நாட்டுத் திறமைகளை நாம் கண்டுகொள்வதில்லை. இந்த வழக்கத்திற்கு ஆரம்பத்திலேயே சிக்கியவர் தான் கோவையின் ஜி.டி. நாயுடு!
எந்த நாடு அவரது உழைப்பைக் கொண்டு தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ள வேண்டுமோ அது அவரை கண்டு கொள்ளவில்லை.. அவருக்குக் காரை தயாரிப்பதற்கான உரிமத்தைக் கூட இந்தியா வழங்க மறுத்தது. ஆனால் உலகப் புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் காரை உருவாக்கிய ஜெர்மனி, இந்தியாவே வெட்கப்படும் அளவிலான மிகுந்த ஆர்வத்துடன் அவரது கண்டுபிடிப்புகளை வரவேற்று அங்கீகரித்தது.

லீப்ஜிக்
20ம் நூற்றாண்டில் மத்திய ஐரோப்பாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டமாகவும், உலகளாவிய சிறந்த படைப்புகளைக் காட்சிப்படுத்தும் மையமாகவும் லீப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி (Leipzig Trade Fair) திகழ்ந்தது. இந்த லீப்ஜிக் கண்காட்சியில் தான் ஜி.டி. நாயுடுவின் புகழ்பெற்ற 'ராசண்ட் ரேசரானது' (Rasant razor) சர்வதேச கவனத்தைப் பெற்றது.. மெலிதான, நேர்த்தியான பொறியியல் தொழில்நுட்பத்துடன், பெரும்பாலான ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத கோவை மண்ணில் தயாரிக்கப்பட்ட இந்த ரேசர், ஜெர்மனியின் மிக முக்கியமான பொறியியல் அரங்கில் அங்கீகாரம் பெற்றது.
இந்த வரலாறு தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாட்டின் பொறியியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதற்குக் கிடைத்த சான்றுகள், விருதுகள் என எல்லாமே ஆவணங்களின் மூலம் தெளிவாக அறியலாம். நம் நாடு அந்தக் காலகட்டத்தில் வழங்கிய விருதுகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் எத்தகைய பெரும் திறமையை இழந்துவிட்டோம் என்பது புரியும். கோவைக்குத் தெரிந்த அந்த உண்மையை, இந்தியா அறியாமல் போனபோது, ஜெர்மனியின் லீப்ஜிக் கண்டுகொண்டது.
ஜெர்மனியின் பொறியியல் கலாச்சாரம்
லீப்ஜிக் கண்காட்சியில் கிடைத்த அங்கீகாரம் வெறும் தொடக்கம் மட்டுமே. ஜெர்மனியுடனான ஜி.டி. நாயுடுவின் தொடர்பு மிகவும் ஆழமானது. அவர் அங்குப் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து, ஜெர்மன் பொறியியலாளர்களையும் தொழிலதிபர்களையும் சந்தித்தார். அங்கிருந்த புதிய சிந்தனைகளைக் கொண்டு வந்தார். பவேரியா பகுதியிலிருந்து கோவை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்திய உற்பத்தியாளர்களுக்கு விளக்கினார். இந்த வரலாறு 20ம் நூற்றாண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சிறந்த ஜெர்மன் வாகன மற்றும் பொறியியல் பிராண்டுகளின் வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையது.
வெறும் கோட்பாடுகளைப் பேசாமல், நிகழ் காலத்தில் பொருட்களை உருவாக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஜெர்மன் பொறியியல் கலாச்சாரம் எப்போதும் வழங்கி வரும் மரியாதைக்கு ஜி.டி. நாயுடுவுக்கும் வழங்கியது.. ஜெர்மன் உற்பத்தியாளர்களுடன் ஜிடி நாயுடு மேற்கொண்ட தொடர்புகள் குறித்த முழு விவரங்களும் தற்போதும் மெர்சிடிஸ் பென்ஸ் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.!
இதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ஜெர்மனியர்களால் எளிதில் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சிறந்த இந்தியப் பொறியியலாளராக ஜி.டி. நாயுடு திகழ்ந்தார். அவர் தனது கைகளாலேயே வேலைகளைச் செய்தார், துல்லியமாக அளவிட்டார், ஆடம்பரங்களை வெறுத்தார், மேலும் தனது லேத் இயந்திரங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருந்தார். ஒரு ஜெர்மன் பட்டறையில் அவர் இருந்திருந்தால், அது அவரது சொந்த இல்லத்தைப் போலவே உணர்ந்திருப்பார்.
கார் உரிமம் தர மறுப்பு
ஆனால் 1952ஆம் ஆண்டில், மிக மோசமான ஒரு முரண்பாடு அரங்கேறியது. ஜி.டி. நாயுடுவின் நிறுவனம் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய, வெறும் ரூ.2000 மதிப்பிலான ஒரு பெட்ரோல் எஞ்சின் காரை உருவாக்கியது. அது முழுக்க முழுக்க உள்ளூர் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட working prototype காராகும். மாருதி கார் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாகனக் கனவாக மாறுவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பும், டாடா மோட்டார்ஸ் தனது முதல் பயணிகள் காரை தயாரிப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் இது நிகழ்ந்தது. சொந்தமாக வடிவமைக்கப்பட்ட இந்த கார் உற்பத்திக்கும் ரெடியாக இருந்தது. 1952இலேயே இந்தியா உலக வாகன வரைபடத்தில் தடம் பதிப்பதற்கான பொன்னான வாய்ப்பு கிடைத்திருந்தது.
ஆனால் இந்த வாய்ப்பை அப்போதைய மத்திய அரசாங்கம் நிராகரித்து, அதற்கு உரிமம் தர மறுத்தது. நாட்டின் குறைவான தொழில் உற்பத்தித் திறனை ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1950களில் இருந்த உரிமக் கொள்கை, ஜி.டி. நாயுடு தயாரித்த காருக்கு அனுமதி வழங்கத் தகுதியற்றதாகக் கருதியது. இதனால் அந்த காருக்கான உற்பத்தி தொடங்கப்படாமலேயே போனது. அந்த மாடல் காரும் ஒரு மூலையில் முடக்கப்பட்டது. வரலாற்றில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பெற வேண்டிய ஒரு மாபெரும் சாதனை, பள்ளிப் பாடப்புத்தகங்களில் நுழைவதற்கு முன்பே முழுமையாக மறைக்கப்பட்டது.
நேர் முரண்
இந்த இரண்டு காட்சிகளையும் உங்கள் மனதில் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருபுறம், பொறியியல் தொழில்நுட்பத்திற்கு நாம் இன்றும் வியந்து பார்க்கும் ஜெர்மனி தேசம், கோவையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ரேசரை எழுந்து நின்று பாராட்டுகிறது. மறுபுறம், கோவையில் தயாரிக்கப்பட்ட ஒரு காருக்கு உரிமம் தர மறுத்து அதனை முடக்குகிறது மத்திய அரசு! அவருக்குச் சர்வதேச மேடையை அமைத்துக் கொடுத்த நாடு அவரது சொந்த நாடு அல்ல.. ஆனால் அவரை முற்றிலும் புறக்கணித்த நாடு அவரது சொந்த நாடாக இருந்தது.
இந்த கசப்பான உண்மையைத்தான் கடந்த 70 ஆண்டுகளாகத் தமிழ்நாடு தனது நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறது.. சில நேரங்களில் மட்டுமே இதை வெளியில் பேசவும் செய்கிறது. உலக நாடுகள் அங்கீகரித்த பிறகு நமது கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, அதற்கு முன்பாகவே அவர்களை நாமே கண்டறிந்து மதிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்தத் தேசம் கற்றுக் கொள்ள வேண்டும்














Click it and Unblock the Notifications