பாஸ்போர்ட் இருந்தாலும் இந்திய குடிமகன் இல்லை.. ஏன் தெரியுமா? மத்திய அரசு முக்கியமான விளக்கம்
டெல்லி: இந்தியாவில் பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசு சமீபத்தில் அளித்திருந்த விளக்கம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது ஒருவரின் குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் விளக்கம் கொடுத்ததே இந்த சர்ச்சைக்குக் காரணம்! இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பாஸ்போர்ட் குறித்து சர்ச்சை பெரிதாக வெடித்து வருகிறது. அதாவது 14வது பாஸ்போர்ட் சேவா திவஸ் கொண்டாட்டம் ஜூன் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது பாஸ்போர்ட் தொடர்பாக வெளியுறவுத் துறை ஒரு விளக்கம் கொடுத்திருந்தது. அதாவது பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை என்றும் அது பயண ஆவணம் மட்டுமே எனக் கூறப்பட்டு இருந்தது. இதுவே பெரிய சர்ச்சையாக வெடிக்கக் காரணமாகும்!

பாஸ்போர்ட்
பல்வேறு சரிபார்ப்புகளுக்கு பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும் நிலையில், அதைக் குடியுரிமைக்கான ஆவணமாகக் கருத முடியாது என்றால் வேறு எதைத் தான் குடியுரிமைக்கான ஆவணமாக எடுத்துக் கொள்வார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. இது ஏற்கனவே உள்ள சட்டம் தான் என்றும் கடந்த 12 ஆண்டுகளில் இது தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
விளக்கம்
பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்றாக எப்போதும் இருந்ததில்லை என்றும் மோடி தலைமையிலான அரசு கடந்த 12 ஆண்டுகளில் இது குறித்து எந்த புதிய விதியையும் கொண்டு வரவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 1967ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், பொது நலன் கருதி இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம் என்று அரசு தரப்பு சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாகவே பாஸ்போர்ட் வைத்திருப்பது மட்டுமே இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யாது என்று விளக்கம் தரப்பட்டதாம்.
அதேநேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான தகுதியை நிரூபிக்கப் பயன்படும் 12 முக்கிய ஆவணங்களில் பாஸ்போர்ட் தொடர்ந்து நீடிக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டம் சொல்வது என்ன
1967ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 20-ன்படி, நாட்டின் பொது நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமகன் அல்லாத ஒரு நபருக்கும் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதே சட்டத்தின் பிரிவு 6(2)(ஏ)இன் படி, விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இல்லாத பட்சத்தில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அதிகாரி மறுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி நேர்மாறாக இருக்கும் விதிகளும் இப்போது விவாதமாக மாறியுள்ளது.
இந்த விவாதத்திற்கு மத்தியில், மத்திய வெளியுறவு அமைச்சகம் ஜூன் 20 தேதியிட்ட புதிய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, சாதாரண 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தட்கல் பாஸ்போர்ட் கட்டணமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடும் தாக்கு
அதேநேரம் பாஸ்போர்ட் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது. பாஸ்போர்ட் குடியுரிமைக்கான சான்று அல்ல என்ற இந்த விளக்கம், தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களின் குடியுரிமை உரிமைகளை தன்னிச்சையாகப் பறிப்பதற்கான வேலை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "பா.ஜ.க அரசு ஏற்கனவே தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சில குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய நடவடிக்கை அமைந்துள்ளது" என்றார்.














Click it and Unblock the Notifications