ஐரோப்பாவையே அதிர வைத்த கோவை சக்கரவர்த்தி! ஜெர்மனிக்கு சவால் விட்ட ஜி.டி. நாயுடுவின் 'ராசண்ட்'
கோவை: கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு தொழிற் கண்காட்சிக்கு இப்போது சென்றாலும் அங்கே ஒரு சிறிய பொருளைக் காண முடியும். அது ஒரு சவரக்கத்தி (Razor). அதே தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெரிய கார்கள், மோட்டார்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு முன்னால் இந்தச் சவரக்கத்தி பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகத் தோன்றலாம்.
ஆனால், 'ராசண்ட்' (Rasant) எனப்படும் இந்தச் சவரக்கத்தி, அந்த வளாகத்தில் இருக்கும் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். அன்றாட வாழ்வில் சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு பொருள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.. அதை நம்மூரிலேயே தயாரிக்க முடியும் என்பதை ஒரு கோயம்புத்தூர்க்காரர் நிரூபித்துக் காட்டிய தருணத்தின் அடையாளம் அது!

மேலும், ஒரு காலத்தில் எந்த நாடுகளிலிருந்து இது இறக்குமதி செய்யப்பட்டதோ, அதே நாடுகளுக்கு இதனை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இது புகழ்பெற்றது. இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளைப் பார்த்து, "இதை ஏன் நம்மால் செய்ய முடியாது?" என்று கேட்கும் அந்த உள்ளுணர்வுதான் ஜி.டி. நாயுடுவின் ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் பிரதிபலித்தது. அவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது மற்றும் வியப்பளிக்கக்கூடியது.
1937 மின்சார மோட்டார்
இந்தியாவின் சுயசார்புக் கொள்கைகள் உருவாவதற்குப் பல ஆண்டுகள் முன்பாக, 'மேக் இன் இந்தியா' என்ற முழக்கம் தோன்றுவதற்குப் பல தலைமுறைகளுக்கு முன்பாகவே அதைச் செய்து காட்டியவர் ஜிடி நாயுடு. 1937ஆம் ஆண்டில் கோவையில் உள்ள தனது பட்டறையில் ஜி.டி.நாயுடு மின்சார மோட்டாரை உருவாக்கினார். சொந்த வடிவமைப்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மின்சார மோட்டாரை உருவாக்கினார். உதிரிப் பாகங்களை அவரே தனது பட்டறையில் சேகரித்து, வடிவமைத்து இந்த மோட்டாரை உருவாக்கினார். இது வெறும் டெஸ்ட் மாடல் அல்ல.. மாறாக முழுமையாகச் செயல்படக்கூடிய ஒரு சிறந்த படைப்பாக இருந்தது.
மண்ணெண்ணெய் மின்விசிறி
ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் வெறும் வணிக நோக்கத்திற்காக இல்லாமல்.. எளிய மக்களுக்கு உதவும் வகையிலேயே இருந்தன. 1940 மற்றும் 1950களின் காலகட்டங்களில் பெரும்பாலான இந்திய வீடுகளுக்குப் போதிய மின்சார வசதி இல்லை என்பதை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். இதனால் மின்சாரம் இல்லாமலேயே மண்ணெண்ணெய் கொண்டு இயங்கக்கூடிய ஒரு மின்விசிறியை அவர் உருவாக்கினார். சவரக்கத்தியைப் போலவே, இந்த மின்விசிறியும் மின்சாரம் இல்லாத ஒரு நாட்டின் கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க எளிய வழியில் தீர்வு கண்டது. மின்சார நெட்வோர்க் நாடெங்கும் அமைக்கும் வரை காத்திருக்காமல், அன்றைய தேவையை உடனே பூர்த்தி செய்தார்.
ராசண்ட் சவரக்கத்தி
ராசண்ட் சவரக்கத்தி சிறிய விஷயமாக இருந்தாலும்.. இதுதான் அவரது கண்டுபிடிப்புகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மிக மெல்லியதாகவும், நேர்த்தியான பொறியியல் தொழில்நுட்பத்துடனும், அவரது சொந்த தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்தச் சவரக்கத்தி, ஜி.டி. நாயுடுவை ஒரு கண்டுபிடிப்பாளராக மட்டுமன்றி ஒரு சிறந்த உற்பத்தியாளராகவும் உலகிற்கு அடையாளம் காட்டியது.
ஐரோப்பிய வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றவர்களின் கவனத்தை இது வெகுவாக ஈர்த்தது. எந்தவொரு பொறியியல் கல்லூரியிலும் பயிலாத ஒரு மனிதர் உருவாக்கிய இந்த ராசண்ட் சவரக்கத்தி, அக்காலத்தின் மற்ற இந்தியப் பொருட்களை விடவும் உலகளவில் பரவலான அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெற்றது. பெரும்பாலான இந்தியர்களால் வாங்க முடியாத அன்றாடப் பொருட்களை, அவர்கள் வாங்கும் விலையில் எளிய முறையில் தரமாகத் தயாரிப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
யு.எம்.எஸ் ரேடியோ (UMS Radio)
அதேபோல 1940களின் பிற்பகுதியில் ஜி.டி. நாயுடு யு.எம்.எஸ் ரேடியோ (UMS Radio) என்ற ரேடியோவை தயாரித்தார். இது தென்னிந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ரேடியோக்களில் ஒன்றாகும். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த காலகட்டம் அது. அப்போது இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த ரோடியாவை பெரும்பாலான மக்களால் வாங்க முடியவில்லை. அந்த வீடுகளுக்குள் இந்த யு.எம்.எஸ் ரேடியோ இடம்பிடித்தது. மிகக் குறைந்த விலையில் தகவல்களையும் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இந்த வானொலிக்கு உண்டு.
வாக்குப் பதிவு இயந்திரம்
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய விவாதங்கள் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஜி.டி. நாயுடு ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்து செயல்முறை விளக்கிக் காட்டினார். புதிதாக சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாட்டில், மக்களின் வாக்குகளை எவ்வாறு துல்லியமாகவும் எளிமையாகவும் எண்ணலாம் என்பதற்கு எளிய தீர்வாக அது அமைந்தது. அன்றைய காலகட்டத்தில் அது ஒரு ஆச்சரியமான பொருளாக பார்க்கப்பட்டாலும், இன்றைய நவீன வாக்குப்பதிவு முறைகளுக்கு அதுவே ஒரு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம்.
ஜவுளித் துறை உபகரணங்கள்
20ம் நூற்றாண்டில் கோவை மாநகரம் ஜவுளி உற்பத்தி ஆலைகளால் நிரம்பி வழிய தொடங்கியது. இருப்பினும், அந்த ஆலைகளில் இருந்த பெரும்பாலான இயந்திரங்கள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஜி.டி. நாயுடு தனது பட்டறைகளின் மூலம் அந்த இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுக்கு மாற்றாகவும், அவற்றின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களாகவும் பல சிறிய உபகரணங்களையும் உதிரிப்பாகங்களையும் தயாரித்து வழங்கினார்.
நாம் அனைவரும் அந்த பிரம்மாண்டமான இயந்திரங்களை மட்டுமே நினைவில் கொள்கிறோம். ஆனால் ஜி.டி. நாயுடுவின் யு.எம்.எஸ் பட்டறைகளில் இருந்து வெளிவந்த மிக சிறிய கருவிகளும், சக்கரங்களும்தான் அந்தப் பெரிய ஆலைகளை இயங்க வைத்தன. இன்று உலகிற்கே ஆடைகளை வழங்கும் கோவையின் குறு, சிறு மற்றும் நடுத்தர ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, ஜி.டி. நாயுடுவுக்கு எப்போதும் கடன்பட்டுள்ளது.
தொழில்துறை வரலாறு மற்றும் மரபு
அவரது எந்தவொரு கண்டுபிடிப்பை எடுத்தாலும் அவரது அணுகுமுறையில் நாம் ஒரு பேர்ட்டனை பார்க்கலாம். அதாவது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வாங்கும் ஒரு பொருளை அவர் பார்ப்பார்.. பிறகு அதை முழுமையாகக் கழற்றி ஆராய்வார். அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, பின்னர் அதற்கு இணையான கோவை வெர்ஷனை உருவாக்குவார். அதனை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்ப்பார்.
அவர் நினைத்திருந்தால் காப்புரிமை வைத்துப் பல கோடிகள் சம்பாதித்து இருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, இந்த சாதனையை ஒரு இந்தியன் செய்தான் என்பதைப் பதிவு செய்ய மட்டுமே காப்புரிமையை அவர் பயன்படுத்தினார்.
நாட்டின் தொழில் துறை வரலாற்றை எழுதும்போது வெறும் தொழிற்சாலைகளை மட்டும் கண்டு, அதன் பின்னணியில் இருந்த பட்டறைகளை மறைந்துவிடுகின்றன. அப்படி தான் பல நேரங்களில் அவரது பங்களிப்பு மறைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான வரலாறு அந்தப் பட்டறைகளில்தான் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளை பார்த்து, ஏன் நம்மால் செய்ய முடியாது என்று சிந்தித்து, அதனைத் தானே உருவாக்கி முடித்த அவரது உழைப்பும் சிந்தனையும்தான் ஜி.டி. நாயுடுவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு ஆகும்.













Click it and Unblock the Notifications