சாதாரண நடத்துநரிலிருந்து இந்தியாவின் எடிசன்! கோவை தொழில் புரட்சிக்கு வித்திட்ட ஜி.டி. நாயுடுவின் கதை
கோவை: ஜி.டி. நாயுடு 1893ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள காலங்கல் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே வகுப்பறையில் அடங்கி உட்காராத, அதே சமயம் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி ஓயாமல் கேள்வி கேட்கும் ஒரு வித்தியாசமான சிறுவனாக அவர் வளர்ந்தார். பள்ளிப் படிப்பு அவருக்கு ஆரம்பத்திலேயே முடிந்துவிட்டது. வகுப்பறைக்குள் அவரது ஆர்வம் அடங்கவில்லை என்பதால், அவர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால், அவர் அதற்குப் பிறகு செய்த விஷயங்கள் தான் இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை.
பள்ளியை விட்டு வெளியேறிய அவர், கடன் வாங்கி முதலில் ஒரே ஒரு பேருந்தை வாங்கினார். அதேநேரம் வெறும் பேருந்து உரிமையாளராக மட்டும் அவர் இருக்கவில்லை. அந்தப் பேருந்திற்கு அவரே நடத்துநராகப் பணியாற்றினார், அவரே ஓட்டினார்.. எப்போதெல்லாம் பழுது ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவரே இறங்கி வேலை செய்தார். இரவு நேரங்களில் அந்தப் பேருந்தின் இஞ்சினை கழற்றி போட்டு, அவை எப்படி செயல்படுகின்றன என்பதைத் தானாகவே கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

கடின உழைப்பு
கடின உழைப்பாலும் இடைவிடாத முயற்சியாலும் அந்த ஒற்றைப் பேருந்து இரண்டு பேருந்துகளாக மாறியது. பின்னர் அதுவே ஒரு பெரிய பேருந்து நிறுவனமாக உருவெடுத்தது. பல பேருந்துகளை அவரது நிறுவனம் இயக்கியது. அதுதான் சென்னை மாகாணத்தின் ஆரம்பக்கால பொது போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான கோயம்புத்தூரின் யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் (UMS) ஆகும். 30 வயதைத் தொடுவதற்குள், ஒரு நடத்துநராக இருந்தவர் ஒரு பெரும் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்தார்.
இருப்பினும், அவரது ஆர்வம் போக்குவரத்துத் தொழிலோடு மட்டும் நின்றுவிடவில்லை. அடிப்படையில் அவர் ஒரு ஆய்வாளர்.. ஒரு பொருள் எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை உருவாக்கிப் பார்ப்பதில் தீரா ஆர்வம் கொண்டவர். பேருந்து என்பது அவருக்கு ஒரு போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, மாறாக இஞ்சின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது. என்ஜின்களைப் பற்றிய அவரது ஆர்வம் அவரை லேத் பட்டறையை நோக்கி நகர்த்தியது.
மகத்தான சாதனை
தனது 30களின் பிற்பகுதியில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெகாட்ரானிக்ஸ் பட்டதாரிகளால் கூடச் செய்ய முடியாத சாதனை ஒன்றை அவர் செய்து காட்டினார். அதாவது எந்த ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவியோ, அரசு நிதியுதவியோ இல்லாமல், முழுக்க முழுக்க இந்தியப் பொருட்களைக் கொண்டு, கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்தப் பட்டறையிலேயே 1937ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார மோட்டாரை அவர் தயாரித்தார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, சுயசார்பு என்ற கொள்கையை நிஜமாக்கிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த 25 ஆண்டுகள் உலகமே வியக்கும் பல கண்டுபிடிப்புகளை அவர் உருவாக்கினார். மண்ணெண்ணெய் கொண்டு இயங்கும் மின்விசிறி, ஐரோப்பா வரை புகழ்பெற்ற ரசண்ட் (Rasant) என்ற மிக மெல்லிய ரேசர் தகடு, மிகக் குறைந்த விலையிலான ரேடியோ, வாக்குகளைப் பதிவு செய்யும் இயந்திரம் மற்றும் கோவை நகரத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஜவுளி ஆலைகளுக்கான பல்வேறு நவீன உபகரணங்கள் என அவரது கண்டுபிடிப்புகள் என அவரது பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இதற்காக அவர் பல்வேறு காப்புரிமைகளையும், விருதுகளையும் பெற்றார். உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டார்.
மண்ணின் வளம் பெருக்கிய மாமனிதர்
ஜி.டி. நாயுடுவின் மிகச் சிறந்த குணம் என்னவென்றால், இவ்வளவு பெரிய சாதனைகளை படைத்த பிறகும் அவர் ஒருபோதும் தன் உழைப்பை நிறுத்தவில்லை. இவரது அந்தஸ்தில் இருந்த மற்ற தொழிலதிபர்கள் சொகுசு அறைகளில் அமர்ந்து கொண்டு இருந்த சூழலில், இவர் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு, எப்போதும் அவரது ஆராய்ச்சி கூடத்திலேயே அவர் நேரத்தைச் செலவிட்டார்.
கோவையின் செல்வம்
கோவையின் செல்வத்தை உருவாக்கியவர் என்று அவர் போற்றப்பட்டாலும், அவர் வெறும் பணத்தை மட்டும் சம்பாதிக்கவில்லை.. மாறாக இந்தியப் பொருட்களைக் கொண்டும், இந்தியப் பொறியாளர்களைக் கொண்டும் எப்படி ஒரு நாட்டைத் தொழில் மயமாக்க முடியும் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்துக் காட்டினார். இதுவும் ஒரு வகையான சுதந்திரம் தான். எந்த ஒரு கொடியேற்றமும் ஒரு நாட்டிற்கு வழங்க முடியாத சுதந்திரம் அது. நாயுடு ஏற்கனவே இருந்ததால் கோவை அதை முன்கூட்டியே பெற்றது.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் முதல் நாட்டின் மிகச் சிறந்த தலைவர்கள் வரை பலரும் அவரது பட்டறையைத் தேடி வந்து வியந்திருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி கூடங்கள் என அவர் விதைத்த பல விதைகளின் பலனைத்தான் இன்றைய கோவை அனுபவித்து வருகிறது. அவரது உழைப்பும், தளராமல் போராடும் குணமும் தான் இந்தியாவின் தொழில் துறை வரலாற்றில் அவரை என்றும் அழியாத ஒரு நாயகனாக நிலைநிறுத்தியுள்ளது. இது ஜிடி நாயுடுவின் வாழ்க்கையைப் பற்றிய முதல் அத்தியாயம் தான். அடுத்து வரும் அத்தியாயங்களில் இவை ஒவ்வொன்று பற்றியும் நாம் விரிவாகப் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications