அரசியலில் வெட்கமில்லாத இருவர் சேர்ந்து ஆட்சி.. நாங்கள் ஏன் வருந்தணும்.. விட்டு விளாசிய ஆ ராசா
சென்னை: தமிழகத்தில் இருப்பது பொம்மை அரசு தான் எனவும், வெட்கம் இல்லாத இருவர் சேர்ந்து ஆட்சி நடத்துவதற்கு நாங்கள் ஏன் வருந்த வேண்டும் எனவும் திமுக எம்பி ஆ ராசா பேசியுள்ளார். மேலும் எதற்கெடுத்தாலும் 'ஸ்டாலின் சார்' என்று கூறும் முதல்வருக்கு, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கத் துணிவு இருக்கிறதா? என்றும், பாசிசத்தை எதிர்ப்பதாக சொன்ன அவரால், சிபிஎஸ்இ மற்றும் இந்தி திணிப்பு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தைரியம் உள்ளதா? என்றும் ஆ ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நீட் தேர்வு மற்றும் கல்வி கொள்கைகள் தொடர்பான விவகாரங்களை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழக முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்தார். ஆ ராசா பேசியதாவது:-

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்ததால்..
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, 107 சட்டமன்ற உறுப்பினர்களோடு தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கிறது. சட்டமன்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது போதிய வாக்குகளைப் பெறும் அளவிற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கியதால் விஜய், முதல்வராகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். புதிய ஆட்சியை முதல் 6 மாதத்துக்கு விமர்சிக்க மாட்டோம் என சொல்லியிருந்தார் ஸ்டாலின். இந்த அரசு தொடர்ந்து நடைபெற வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அங்கு அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மோடியை 40 முதல் 50 நிமிடங்கள் வரை சந்தித்த நிலையில், தமிழக முதல்வர் வெறும் 10 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டது. அவரும் நிர்மலா சீதாராமனைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் உடனடியாகத் தமிழகத்துக்கு திரும்பினார்.
இரவு முழுவதும் ஒத்திகை பார்ப்பார் போல
சட்டமன்றத்திற்குள் பதிலுரை ஆற்றிய முதல்வர் விஜய்யின் குரலில் இருந்த தளர்வு, சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமையை திருச்சியில் அவர் உரையாற்றிய போது கர்ஜிப்பதாக நினைத்துக் கொண்டு கத்திப் பேசிய பேச்சையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுகவை திட்டும் போது ஸ்கிரிப்ட் இல்லாமல் பேசும் விஜய், இரவு முழுவதும் ஒத்திகை பார்த்திருப்பார் போல.. எதற்கெடுத்தாலும் 'ஸ்டாலின் சார்' என்று கூறும் முதல்வருக்கு, மத்திய அரசை எதிர்த்து பேசும் துணிவு இருக்கிறதா?.. பாசிசத்தை எதிர்ப்பதாக சொன்னீர்கள்.. இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் என்று ஆளுநர் உரையில் கூறிய நிலையில், சிபிஎஸ்இ மற்றும் இந்தி திணிப்பு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க அரசுக்கு தைரியம் உள்ளதா?..
முதல்வர் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பதிலேயே ஈடுபட்டு வருகிறார்.. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை. திமுக தயவில் ஆட்சியமைத்துவிட்டு, மற்ற கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்தோம் என சொல்கிறார்கள்.. வெட்கம் இல்லாத இருவர் சேர்ந்து ஆட்சி நடத்துவதற்கு நாங்கள் ஏன் வருந்த வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications