எலான் மஸ்க் சாயம் வெளுத்தது.. 3 நாளில் 600 பில்லியன் டாலர் காணாமல் போனது.. பாவம் மனுஷன்!
உலகின் மிகப்பெரிய விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ், பங்குச்சந்தையில் பட்டியலான சில நாட்களிலேயே கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன. இந்த சரிவுக்கு மிக முக்கியமான காரணம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முதன்முறையாக பத்திரங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்து பங்குகளை விற்று வருகின்றனர்.

திங்கட்கிழமை ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் 16% சரிந்து 154.60 டாலர் என்ற அளவில் முடிவடைந்தன. இது நிறுவனத்தின் ஐபிஓ-வுக்குப் பிறகு பதிவு செய்துள்ள குறைந்த விலையாகும். கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சுமார் 23% சரிந்து, 600 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 2 டிரில்லியன் டாலருக்கும் சற்று அதிகமாக உள்ளது. ஆயினும் ஐபிஓ விலையான 135 டாலரை ஒப்பிடுகையில் 15% அதிகமாகவே உள்ளது. ஜூன் 16ஆம் தேதி 225.64 டாலர் வரையில் உயர்ந்தது.
ஏன் இந்த சரிவு?
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு நிதி திரட்ட, முதன்முறையாக முதலீட்டு தர பத்திரங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது பெரிய அளவிலான கடன் வாங்கும் தொடக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐபிஓ நிறுவனங்களில் பொதுவாக ஏற்படும் ஏற்ற இறக்கம் இதில் இருந்தாலும், முதலீட்டாளர்கள் AI திட்டங்களுக்கு இத்தகைய பெரிய கடன் தேவைப்படுவது குறித்து கவலை அடைந்துள்ளனர். இதேபோல் ஐபிஓ வெளியிட்டு நிதி திரட்டிய ஒரு வாரத்தில் மீண்டும் முதலீட்டு திரட்டல் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைத்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் 75 பில்லியன் டாலர் நிதியை திரட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த சரிவுக்குப் பிறகும், ஸ்பேஸ்எக்ஸ் உலகின் ஆறாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. ஐபிஓ-வின் முதல் நாளில் வெறும் 4.2% பங்குகள் மட்டுமே வர்த்தகத்திற்கு வந்ததால், ரீடைல் முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக ஆர்வம் காட்டப்பட்டது.
எலான் மஸ்க் AI துறையில் பெரிய திட்டங்களை செயல்படுத்த விரும்புவதால், இந்த கடன் திரட்டல் அவசியம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் சந்தை இதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன சிக்னல்?
பெரிய நிறுவனங்களின் ஐபிஓ என்றாலே தொடர்ந்து ஏற்றம் மட்டுமே இருக்கும் என்ற கருத்தை ஸ்பேஸ்எக்ஸ் பங்கின் முதல் சில நாட்கள் உடைத்துள்ளன. அதிக மதிப்பீடு, குறைந்த வர்த்தக பங்குகள், புதிய நிதி திரட்டும் திட்டங்கள் ஆகியவை இணைந்தால், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குக் கூட கடுமையான விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications