அன்புமணியை ஆரத்தழுவிய ராமதாஸ்.. ஆனந்த கண்ணீர் பின்னால் பாமகவின் பலே அரசியல் கணக்கு
விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் அடியோடு மாறியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. அதிமுக கட்சியே உடைந்து பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுக கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த தமாகா வெளியேறிவிட்டது. பாமகவின் நிலைப்பாடு பற்றி தகவல் இல்லை. இந்நிலையில் பாமகவில் எதிரும், புதிருமாக இருந்த ராமதாஸ், அன்புமணி தைலாபுரத்தில் இன்று சந்தித்துள்ளனர். அன்புமணியை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் ராமதாஸ். இதன் பின்னணியில் அரசியல் கணக்குகளும் இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் கூட அவர்கள் இணைந்து செயல்படவில்லை. அன்புமணி மீது ராமதாஸ் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வயதாகிவிட்டதால் ராமதாஸ் இப்படி பேசி வருவதாக அன்புமணி கூறினார்.

ராமதாஸ் அன்புமணி சந்திப்பு
இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர். பாமகவில் பெரும் பிளவு ஏற்பட்டு, மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். சட்டமன்ற தேர்தலில் பாமக சின்னம் கட்சி அன்புமணி கட்டுப்பாட்டுக்கு சென்றது. அன்புமணி அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தார். ராமதாஸ் சசிகலா கட்சியுடன் கூட்டணி வைத்தார். தேர்தல் முடிந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பாமகவிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அன்புமணி தலைமையில் பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமதாஸ் தரப்பு தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். இதனால் ராமதாஸ் அணியில் இருந்து பலரும் அன்புமணி அணிக்கு தாவி வருகிறார்கள். இதனால் ராமதாஸ் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சந்திப்பதையே தவிர்த்து வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று அன்புமணி தன் மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் சென்று ராமதாஸை சந்தித்தார்.
ஆனந்த கண்ணீர் பின்னால் அரசியல்
தைலாபுரத்தில் அவர்களுக்கு ஆரத்தில் எடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. ராமதாஸ் - சரஸ்வதி தம்பதிக்கு இது 61வது திருமண நாளாகும். இதற்காக அன்புமணி சென்ற நிலையில் ராமதாஸ் கண்கலங்கி அவரை ஆரத்தழுவி மகிழ்ந்துள்ளார். அன்புமணி மற்றும் சௌமியா ராமதாஸ் - சரவஸ்வதி கால்களில் விழுந்து ஆசி வாங்கினார்கள். இதுகுறித்து பாமகவினர் கூறுகையில், "தமிழக அரசியல் களம் மாறிவிட்டது. பாமகவில் பிளவு இல்லாவிடின் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும்.
எனவே உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு அணிகளை இணைத்து கட்சியை பலப்படுத்த அன்புமணி திட்டமிட்டுள்ளார். உணர்ச்சிவசத்தில் ராமதாஸ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். ஆனந்த கண்ணீருக்கு பிறகு அரசியல் கணக்குகளும் உள்ளன. அணிகளை இணைப்பதில் ராமதாஸ், அன்புமணி இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விரைவில் ஒன்றுபட்ட பாமகாவாக அடுத்தகட்ட அரசியல் காய் நகர்த்தல்களில் இறங்குவோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications