பெத்த தாயா இவர்? குழந்தை இடைஞ்சலா இருந்தது.. கோவை கோர்ட்டில் சரோஜினி சொன்ன வார்த்தை! உறைந்த ஆனைமலை
கோவை: கோவை ஆனைமலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில், 14 வருடங்கள் கழித்து, தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்ற குழந்தையையே தாயே கொன்ற இந்த கொடூர சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றைய தீர்ப்பு பலரது கவனத்தை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த தம்மம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 32 வயதான இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கும் சேத்துமடை பகுதியைச் சேர்ந்த 27 வயதான சரோஜினி என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு காதல் மலர்ந்திருக்கிறது.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாகவே சென்றது. திருமணமான ஒன்றரை வருடம் கழித்து இந்த தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
கோவை தம்பதி
குழந்தை பிறந்த பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று பார்த்தால், மாறாக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் நீடித்ததால், மனவேதனையடைந்த சரோஜினி கோபித்துக் கொண்டு சேத்துமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மனைவியைப் பிரிந்து வாழ முடியாத மணிகண்டன், சில நாட்கள் கழித்து சேத்துமடையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கே சென்று அங்கேயே தங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
சரோஜினி செய்த காரியம்
இந்த சூழ்நிலையில்தான் சரோஜினி அங்குள்ள வாய்க்கால் பராமரிப்பு வேலைக்கு தினக்கூலியாக செல்ல தொடங்கினார். அங்கு வேலை செய்தபோது சரோஜினிக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. கணவனுக்குத் தெரியாமல் சரோஜினியும் அந்த இளைஞரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது நெருக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
இவர்களது இந்தத் தகாத உறவு ஒருகட்டத்தில் கணவர் மணிகண்டனுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி சரோஜினியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், சரோஜினி கணவனின் பேச்சைக் கேட்காமலும், தனது கள்ளக்காதலை கைவிடாமலும் தொடர்ந்து அந்த நபருடன் பழகி வந்துள்ளார். இதனால் மிகவும் வேதனையடைந்த மணிகண்டன், மனைவியுடன் வாழப் பிடிக்காமல் தம்மம்பதியில் உள்ள தனது சொந்த வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார்.
கள்ளக்காதல் கொலை
இதனைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியன்று மணிகண்டனின் பெற்றோர் சேத்துமடைக்குச் சென்று சரோஜினியிடம் சமாதானம் பேசியுள்ளனர். மகனின் வாழ்க்கையை எண்ணி மருமகளையும், தங்களது பேத்திகளையும் சமாதானப்படுத்தி தம்மம்பதியில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
ஆனால் தம்மம்பதி வந்த பிறகும் கணவன் மற்றும் மனைவி இடையே மீண்டும் சண்டை வெடித்தது. இதனால் விரக்தியடைந்த சரோஜினி, தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து நடத்துவதற்கும், கள்ளக்காதலனோடு ஓடிப் போவதற்கும் தன்னுடைய குழந்தை மிகப்பெரிய தொந்தரவாக இருப்பதாக நினைத்தார்.. எனவே கள்ளக்காதல் பெற்ற குழந்தையை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தார்.
ஐடியா தந்த கள்ளக்காதலன்
அதன்படி 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியன்று மணிகண்டன் எப்போதும் போல கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சரோஜினியும், அவரது பெண் குழந்தையும் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை சரோஜினி திடீரென வீட்டிற்குள் தூக்கிச் சென்று, மகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.
பிறகு, வெளியில் யாருக்கும் எதுவுமே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, குழந்தை திடீரென மயக்கமடைந்து விட்டதாகக் கூறி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார் சரோஜினி.. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
உளறிய சரோஜினி - போஸ்ட் மார்ட்டம்
இதனிடையே குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அதன் அறிக்கை முடிவில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஆனைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
குழந்தையின் பிறப்புறுப்பில் வீக்கம் இருப்பதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸார் கேட்டபோது, குழந்தைக்கு ஒரு மருந்து கொடுத்தேன். அதனால்தான் இப்படியானது' என்று முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாராம் சரோஜினி..
இதற்கு பிறகுதான் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக சரோஜினி வாக்குமூலம் அளித்தார். எங்கள் உறவுக்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால், அவளை கொலை செய்ய கள்ளக்காதலன்தான் ஐடியா தந்தார்.. அதனால்தான், கணவர் வேலைக்குச் சென்றவுடன் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் என்று பதட்டமேயில்லாமல் சொன்னார்.. இதையடுத்து சரோஜினி மற்றும் பொம்மன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
14 வருடங்கள் வழக்கு
இதையடுத்து ஆனைமலை போலீசார் சரோஜினியைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.
தற்போது இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், குழந்தையைக் கொலை செய்த தாய் சரோஜினிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார்..
நீதிபதி தந்த தீர்ப்பு
கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், போலீசார் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம் தற்போது இறுதி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
கள்ளக்காதலனுக்காகப் பெற்ற மகளையே கொன்ற சரோஜனிக்கு, ஆயுள் தண்டனை விதித்து வால்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. 14 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு கோவை மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications