ட்வின்ஸ் பிறந்தால் தங்க மோதிரம் 2 வழங்கப்படுமா? தாய்மாமன் சீர் திட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம்!
சென்னை: சட்டமன்ற தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதில் முக்கியமானது தாய்மாமன் சீர் அறிவிப்புதான். அதாவது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை இரட்டை குழந்தைகள் பிறந்தால்? ஒரு மோதிரம்தான் வழங்கப்படுமா? என்கிற சந்தேகம் இருந்தது. இது குறித்து தமிழக அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.
அரசு மருத்துவமனை மருத்துவர்களை போல, மருத்துவ அனுபவ அறிவு பெற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கூட கிடையாது. ஆனால், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதால், மக்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

இப்படி இருக்கையில் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தவும், மக்களை அரசு மருத்துவமனைகள் பக்கம் ஈர்க்கவும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதில் முக்கியமானதுதான் இந்த தாய்மாமன் சீர் திட்டம்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள், இந்த திட்டத்தின்படி பலன் பெறுவார்கள். அதாவது குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் தாய் மாமன் சீர் பொருட்கள் வழங்கப்படும். ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடியை ஒதுக்க திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், இந்த திட்டத்தில் மக்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள் எனில், அவர்களுக்கு ஒரு மோதிரம் மட்டும்தான் வழங்கப்படுமா? அல்லது.. இரண்டு மோதிரம் வழங்கப்படுமா? என்று சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தால், இரண்டு குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராமில் இரண்டு மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்.15ம் தேதி முதல் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் ஜூன் 22ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்கம் விற்கும் விலைக்கு.. இரட்டையர்களுக்கு இரண்டு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications