உத்தவ் தாக்கரே அதிர்ச்சி.. சரத் பவார் அதிரடி! மிஸ்ஸான 23 எம்எல்ஏக்கள்.. மகாராஷ்டிரா அரசியல் பூகம்பம்
மும்பை: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மகாராஷ்டிர அரசியல் களம் அமைதியடைந்துவிட்டது என்று நினைத்த வேளையில், அங்கு மீண்டும் ஒரு பிரம்மாண்ட அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் 6 எம்.பி-க்கள் திடீரென ஏக்நாத் ஷிண்டே அணிக்குத் தாவிய அதிர்ச்சி விலகுவதற்குள், மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை 23 எம்எல்ஏக்கள் மொத்தமாகப் புறக்கணித்திருப்பது கூட்டணியின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2024 டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதே ஆண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை வென்றிருந்த நிலையில், டிசம்பர் மாத சட்டசபை முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தது. பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற நிலையில், இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.

23 பேர் மிஸ்ஸிங்
அதன் பிறகு அங்கு அரசியலில் பெரிய சலசலப்பு இல்லை. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்கரே சிவசானா எம்பிக்கள் 6 பேர் ஷிண்டே அணிக்குத் தாவினர். இந்த அதிர்ச்சி முடிவதற்குள் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் ஜூன் 24ம் தேதி மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆனால், இதில் தான் மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இந்த முக்கியமான கூட்டத்தில் சரத் பவார் என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 23 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
சரத் பவார், ஜெயந்த் பாட்டீல், ரோஹித் பவார், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே மற்றும் விஜய் வடேட்டிவார் போன்ற முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தைத் தவிர்த்தனர். இந்த ஒட்டுமொத்தப் புறக்கணிப்பால் கடும் அதிருப்தியடைந்த சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, "கூட்டணியின் ஒற்றுமை என்பது வெறும் அறிக்கைகளில் மட்டும் இருந்தால் போதாது.. அது செயலிலும் இருக்க வேண்டும்" என்று கூட்டத்திலேயே மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார்.
மறுப்பு
கூட்டணியில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகச் செய்திகள் தீயாய்ப் பரவ, அதனை மூத்த தலைவர்கள் உடனடியாக மறுத்துள்ளனர். ஜூன் 23ம் தேதி நடக்கவிருந்த கூட்டம் திடீரென ஜூன் 24க்கு மாற்றப்பட்டதால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தனிப்பட்ட வேலைகள் மற்றும் தொகுதிப் பணிகள் காரணமாகவே வரமுடியவில்லை என்று ஜெயந்த் பாட்டீல் விளக்கமளித்துள்ளார். மற்ற எம்.எல்.ஏ-க்களும் தங்களது உடல்நலக் குறைவு மற்றும் அவசர வேலைகளையே காரணமாகக் காட்டியுள்ளனர்.
இதற்கிடையே, சரத் பவார் கட்சியின் 8 எம்.பி-க்களில் 5 பேர் வரும் டிசம்பருக்குள் துணை முதலமைச்சர் சுநேத்ரா பவார் தலைமையிலான என்சிபி (அஜித் பவார்) அணிக்கு மாறத் தயாராக இருப்பதாக என்சிபி எம்.எல்.ஏ தர்மராவ் ஆத்ராம் அதிரடிக் குண்டை தூக்கிப் போட்டார்.
சரத் பவார் சவால்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "எங்கள் கட்சியிலிருந்து ஒரு எம்.பி அல்லது ஒரு எம்.எல்.ஏ கூட எதிரணிக்கு மாறமாட்டார்கள்.. அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவரது மகளும் பாராமதி தொகுதி எம்பியான சுப்ரியா சூலே, "அப்படி கட்சி மாற போகும் 5 எம்.பி-க்களின் பட்டியல் இருந்தால் அதை உடனே வெளியிடட்டும்" என்று அதிரடியாகச் சவால் விடுத்தார்.
சிவசேனா கட்சியின் 6 எம்பிக்கள் ஷிண்டே அணிக்கு மாறியதைத் தொடர்ந்து, தற்போது ஒட்டுமொத்தப் பார்வையும் சரத் பவாரின் 8 எம்.பி-க்கள் மற்றும் 10 எம்.எல்.ஏ-க்கள் மீது திரும்பியுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒரே நேரத்தில் மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசுக்கு பொது சிவில் சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போன்ற மிக முக்கியமான அரசியல் சாசனச் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசிடம் இந்த நம்பர் இல்லை. இதற்காகவே சரத் பவார் அணியில் உள்ள எம்பிக்களைக் குறிவைத்து திரைக்குப் பின்னால் காய் நகர்த்தி வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.














Click it and Unblock the Notifications