கேலி, கிண்டல் பண்றீங்களா? தூள் தூளாக்க போகிறார் விஜய்! கொந்தளித்த செங்கோட்டையன்
சென்னை: கேலி கிண்டல் பண்றீங்களா, தூள் தூளாக உடைக்க போகிறார் முதல்வர் விஜய் என அமைச்சர் செங்கோட்டையன் கொந்தளிப்புடன் தெரிவித்தார். மேலும் சாக்கடையில் நின்றுக் கொண்டு கல்வீச மாட்டேன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் உரையாற்றினார்.

"செங்கோட்டையன் இனி கோபிசெட்டிபாளையத்தில் நடமாட முடியுமா?" என்று கேலி பேசியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தான் இன்று அமைச்சராக மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருவதைச் சுட்டிக் காட்டினார்.
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், மக்களின் அன்பால் மட்டுமே தான் இந்த நிலையை எட்டியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது அரசியல் பயணத்தைப் பற்றிப் பேசிய அவர், 1972-ல் அதிமுக தொடங்கப்பட்டபோது கையெழுத்திட்ட முதல் 51 நபர்களில் தானும் ஒருவன் என்பதை நினைவுகூர்ந்தார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுடன் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தன்னை விமர்சித்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்பை முந்தைய தலைவர்களிடம் கற்றுக் கொண்டதாகவும், அதே பண்பை தற்போதைய தமிழக வெற்றி கழகத் தலைவரிடமும் காண்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் புழக்கம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது நாட்டுக்கே தெரியும் என்று சாடினார்.
"சாக்கடையில் நின்று கொண்டு நான் கல்லை வீச மாட்டேன்" என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்துக் காட்டுவார் என்று உறுதிபடக் கூறினார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய செங்கோட்டையன், நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நகைகளை அணிந்து கொண்டு அச்சமின்றிச் செல்லும் நிலையே உண்மையான சுதந்திரம் என்ற காந்தியின் கனவை நனவாக்க முதலமைச்சர் பாடுபட்டு வருவதாகக் கூறினார்.
இதற்காகவே 'சிங்கப்பெண்மணி' என்ற தனிப்பிரிவு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சினிமாவில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தைத் துறந்துவிட்டு, மக்கள் பணிக்காக வந்திருக்கும் தலைவரின் தியாகத்தைப் போற்ற வேண்டும் என்றார்.
தமிழகத்தின் நிதி நெருக்கடிகள் மற்றும் வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசு சந்தித்து வரும் சவால்களை ஒவ்வொன்றாகச் சரிசெய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் எண்ணக் கனவுகளை நிறைவேற்றும் நேர்மையான ஆட்சியைத் தருவதே இந்த அரசின் நோக்கம் என்றார்.
பத்தாவது முறையாகத் தன்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த மக்களுக்குத் தனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, மக்களின் அன்பே தனது பலம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications