5 விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்த ஏர் இந்தியா!
டெல்லி: பெரும் நஷ்டம் காரணமாக, போயிங் நிறுவனத்திடம் வாங்கத் திட்டமிட்டிருந்து 5 விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்துவிட்டது ஏர் இந்தியா நிறுவனம்.
மேலும் குறித்த நேரத்தில் தங்களுக்கு 27 பி 787 விமானங்களை சப்ளை செய்யாத போயிங் நிறுவனத்திடம் 710 மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாகக் கேட்டுள்ளதாம் ஏர் இந்தியா.
விமானங்களுக்கான ஆர்டர் ரத்து குறித்து ஏற்கெனவே உரிய கடிதங்களை போயிங் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டதாக ஏர் இந்தியா தலைவர் அர்விந்த் ஜாதவ் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போயிங் நிறுவனத்திடமிருந்து 8 பில்லியன் டாலர் செலவில் 68 போயிங் விமானங்களை வாங்கத் திட்டமிட்டது ஏர் இந்தியா. இவற்றில் 23 விமானங்கள் 777 ரகத்தைச் சேர்ந்தவை. 27 விமானங்கள் 787-8 ட்ரீம் லைனர்ஸ் ரகம். மீதி 18 விமானங்கள் 737-800 ரகத்தைச் சேர்ந்தவை.
ஒவ்வொரு விமானமும் 165 மி்ல்லியன் முதல் 200 மில்லியன் வரை விலை கொண்டவை. ஏர் இந்தியாவுக்கு சற்று சலைகை விலையில் இந்த விமானங்களை சப்ளை செய்ய ஒப்புக் கொண்டது போயிங்.
இடையில் பெரும் நஷ்டத்துக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டதால், பல வழித்தடங்களை ரத்து செய்துள்ளது. எனவே அதற்கேற்ப தனது ஆர்டரில் சில விமானங்களைக் குறைத்துக் கொண்டுள்ளது.