எஸ்.ஐ.டி விசாரணை நிறுத்தம் - குஜராத் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: முதல்வர் நரேந்திர மோடியை விசாரிக்க விடாமல் தடுக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வுப் படையின் விசாரணைக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று கோரி குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.
2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜாப்ரியின் மனைவி ஜாகயா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் ஜாப்ரி உள்ளிட்டோர் கொல்லப்ப்ட சம்பவத்தில் முதல்வர் நரேந்திர மோடி, அவரது சக அமைச்சர்கள் உள்ளிட்டோரின் தொடர்புகளை அறிய அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்ற உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுப் படையினர், மோடி உள்ளிட்டோரையும் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மோடியை விசாரிக்க இடைக்கால தடை கோரி மனு செய்தார். ஆனால் இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில், 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுப் படைக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று கோரி குஜராத் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுப் படையை சுப்ரீம் கோர்ட் அமைத்து உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.
குஜராத் மாநில அரசின் மனு நீதிபதிகள் டி.கே.ஜெயின், சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரஸ்தோகி வாதிடுகையில், எஸ்.ஐ.டி. ஏப்ரல் 27ம் தேதி அமைக்கப்பட்டது. அதன் ஆயுள்காலம் 3 மாதங்கள்தான். அது ஜூலை 27ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே இதை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றார்.
ஆனால் இதை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு புலனாய்வுப் படை சுதந்திரமாக செயல்படக் கூடியதாகும் என்று தெரிவித்தனர்.
அப்போது ரஸ்தோகி எழுந்து, எஸ்ஐடி தனது எல்லையை மீறும் வகையில் செயல்படுகிறது. மேலும், ஏப்ரல் 27ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விளக்கம் கேட்டு குஜராத் அரசு மனு தாக்கல் செய்யவுள்ளது. அந்த அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை எஸ்ஐடியின் ஆயுள் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எஸ்ஐடி தனது விசாரணையை முழுமையாக முடிக்க டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்தால் குஜராத் அரசு என்ன செய்யும்? அது உங்களை எந்த வகையில் பாதிக்கும்?. அதனால் என்ன விதி மீறல், சட்ட மீறல் வந்து விடும்? உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் எஸ்ஐடி செயல்படுகிறது.
ஏப்ரல் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவு மீது விளக்கம் கேட்டோ அல்லது மறு பரிசீலனை செய்யக் கோரியோ இன்று எங்கள் முன்பு எந்த மனுவும் இல்லை.
எனவே எஸ்ஐடி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட எந்தத் தடையும் இல்லை. அது தாராளமாக தனது செயல்பாடுகளைத் தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.