பாக். சிறையில் வாடும் சரப்ஜித்தின் குடும்பத்தினர் ராஜ் தாக்கரேவுடன் சந்திப்பு
மும்பை: பாகிஸ்தான் சிறையில் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கப் போராடி வரும் இந்தியர் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை இன்று சந்தித்தனர்.
சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கெளர், அவரது கணவர் பல்தேவ் சிங், சரப்ஜித்தின் மகள் ஸ்வந்தீப் கெளர் ஆகியோர் இன்று மும்பை வந்து ராஜ் தாக்கரேவை சந்தித்தனர்.
சரப்ஜித் சிங்கின் நிலையை ராஜ் தாக்கரேவிடம் விவரித்தனர். சரப்ஜித்தை விடுவிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாகவும் முறையிட்டனர்.
இந்த சந்திப்பின்போது தல்பீர் கெளர், ராஜ் தாக்கரேவுக்கு ராக்கி கயிற்றையும் கட்டினார்.
சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவிகளைச் செய்வதாக அப்போது ராஜ் தாக்கரே உறுதியளித்தார்.
சிவ சேனா தலைவர்களையும் சந்திக்க தாங்கள் முயன்றதாகவும், ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பின்னர் தல்பீர் கெளர் தெரிவித்தார்.