கணவரின் பிணத்துடன் பூட்டிய வீட்டுக்குள் 5 நாள் இருந்த பெண் மீட்பு
செங்கல்பட்டு: கணவரி்ன் அழுகிப் போன இறந்த உடலுடன் 5 நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் இருந்த பெண்ணை போலீஸார் மீட்டுள்ளனர். உடலும் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் வசித்து வந்தவர் ஜெயக்குமார் (53). சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் என்ஜினீயரிங் பிரிவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு குழந்தை இல்லை.
ரேணுகா மனநலம் பாதிக்கப்பட்டவர். ரேணுகா அக்கம் பக்கத்தினருடன் பேசுவது கிடையாது. இதனால் இவர்களது வீட்டில் என்ன நடந்தாலும் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாது.
இந்த நிலையில் ஜெயக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசை கண்டதும் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் ரேணுகா விரட்டினார். பின்னர் அவர்களை உள்ளே அழைத்தார். காபி கொடுத்தார்.
வீட்டுக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் அதிகம் இருந்தது. இதையடுத்து போலீஸார் உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜெயக்குமாரின் உடல் துணியால் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தனர். உடல் மிகவும் அழுகிப் போய் காணப்பட்டது.
ஜெயக்குமார் இறந்து சுமார் 5 நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரேணுகாவிடம் போலீஸார் கேட்டனர். ஆனால் அவர் சரியான பதிலைத் தரவில்லை. மாறாக, என் கணவரை காப்பாற்ற எனக்கு தெரியும். நீங்கள் வெளியே போங்கள் என்று கூறினார்.
பிறகு தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி பூஜை அறையில் மாட்டி விட்டு குளியல் அறைக்குப் போனார்.
இதையடுத்து அவரை சமாதானம் செய்த போலீஸார் ஆம்புன்ஸை வரவழைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஜெயக்குமாரின் பிரேதத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications