பெரும் மாற்றத்திற்கு ராமதாஸ் திட்டம்- அன்புமணி தலைவராக்கப்படுவாரா?
லோக்சபா தேர்தல் தோல்வியிலிருந்து இன்னும் பாமக மீளவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பாமக பெரிய அளவில் எதிலும் ஈடுபடாமல் அமைதியாக உள்ளது.
தோல்விக்கான காரணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வரும் அக்கட்சித் தலைமை தற்போது கட்சியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இடஒதுக்கீடு பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நாளையும் தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் கட்சியின் நிர்வாகிகளை மாற்றியமைக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞர் அணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸை, கட்சித் தலைவராக உயர்த்தும் திட்டமும் ராமதாஸிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே இதுகுறித்து பேச்சு அடிபட்டது. இருப்பினும் அப்போது அதை மேற்கொள்ள ராமதாஸ் விரும்பவில்லை.
ஆனால் தற்போது கட்சி இக்கட்டான நிலையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் கட்சியை கொண்டு செல்வது குறித்து அவர் யோசிப்பதாக கூறப்படுகிறது.
அன்புமணி கட்சித் தலைவராக்கப்பட்டால், ஜி.கே.மணி அவைத் தலைவர் போன்ற ஒரு பதவியில் அமர்த்தப்படக் கூடும் என்றும் தெரிகிறது.