மலேசியாவில் 438 பேர் மீது ஐ.எஸ்.ஏ.வில் கைது
கோலாலம்பூர்: மலேசியாவின் அடக்குமுறைச் சட்டமான உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரி நேற்று அந்த நாட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய மிகப் பெரிய பேரணியில், பெரும் வன்முறை மூண்டது. 438 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மலேசிய அரசின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், இந்தியாவில் இருந்த பொடா சட்டத்தை விட மோசமானது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அங்கு நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் இந்திய வம்சவாளியினர் நடத்திய போராட்டத்தின்போது ஹின்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை இந்த சட்டத்தைக் கொண்டுதான் மலேசிய அரசு சிறையில் போட்டு வைத்து ஒரு வருடங்களுக்கு பின்னர் சமீபத்தில் விடுதலை செய்தது.
இந்த நிலையில், இந்த சட்டத்தை ஒழிக்கக் கோரி அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் கோலாலம்பூரில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
ஆனால் போலீஸார் இந்தப் பேரணியை வன்முறை மூலம் அடக்கியதால் பெரும் அமளி ஏற்பட்டது. மலேசிய வரலாற்றில் போலீஸார் இது போல நடந்து கொண்டதில்லை என்று கூறும் அளவுக்கு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், போராட்டத்தை போலீஸார் அடக்கினர்.
பல்வேறு தெருக்கள் வழியாக சிறு சிறு குழுக்களாக வந்த மக்கள், திடீரென மொத்தமாக திரண்டு பேரணியாக கிளம்பினர். இதை எதிர்பார்க்காத போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். சிதறி ஓடிய மக்கள் சிறு சிறு தெருக்கள் வழியாக ஓடி பின்னர் மீண்டும் கூடி பேரணியைத் தொடர்ந்ததால் கோலாலம்பூரே பெரும் அமளியாகி விட்டது.
நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
438 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது..
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 438 பேரை மலேசிய போலீஸார், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 38 பேர் 18 வயதுக்கும் கீழானவர்கள். 37 பேர் பெண்கள் ஆவர்.
கைதானவர்களில் அன்வர் இப்ராகிமின் கட்சியான பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவரான சிவராசாவும் ஒருவர்.












Click it and Unblock the Notifications