மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையை குண்டு வைத்துத் தகர்க்க சதி?
மைசூர்: மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அணைக்கு அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு வகையில் தீவிரவாத செயல்களை தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாட்டின் முக்கிய அணைகளை குண்டு வைத்துத் தகர்ப்பது என்பது அதில் ஒன்றாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையை குண்டு வைக்க சதி நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை தற்போது நிரம்பி வழிகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அணை பகுதி முழுவதும் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது ஒரு இடத்தில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடிகுண்டுகளான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
அணையை தகர்க்கும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் இவற்றை இங்கு பதுக்கி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications