ஆடி்பெருக்கு விழா - காவிரிக் கரையில் மக்கள் உற்சாக வழிபாடு
திருச்சி: ஆடிப்பெருக்கு விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காவிரிக் கரையில் லட்சக்கணக்கான மக்கள் இன்று பக்திப் பெருக்குடன் ஆடிப்பெருக்கைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று ஆடி மாதம் 18ம் நாள் ஆகும். இது ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பேறு, நீடித்த ஆயுள், திருமணப்பேறு, புதுமணமக்கள் வாழ்வில் சுபிட்சம் கூடி வர ஆடிப்பெருக்கு தினத்தன்று மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
இந்த ஆடிப் பெருக்கு தினத்தன்று காவிரி உள்ளிட்ட ஆறுகளுக்குச் சென்று கங்கை தேவியை மனதில் வரித்து வணங்குவது வழக்கம்.
இதையொட்டி இன்று ஒகேனக்கல், மேட்டூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரிகிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ், கார்கள், வேன்களில் வந்து குவிந்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து விட்டு காவிரி அன்னையை வழிபட்டனர். ஏராளமான பேர் ஒகேனக்கல் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல், மேட்டூர் காவிரியில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்தனர். ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சேலம், தர்மபுரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தது.
ஸ்ரீரங்கத்தில்...
திருச்சியிலும் ஆடிப் பெருக்கு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி ஆடிப் பெருக்கைக் கொண்டாடினர்.
தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.
புதுமணதம்பதிகள் தாலிகயிறு மாற்றி வழிபாடு நடத்தினார்கள். பவானி-கொடுமுடியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து வழிபட்டனர்.
காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால் இந்த ஆண்டு மக்கள் மிகுந்த மன நிறைவுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.