நளினி விடுதலை - உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழக அரசு பெரும் மெளனம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை கோரிக்கை குறித்து ஆலோசனைக் குழு அமைத்துப் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கிட்டத்தட்ட 10 மாதங்களாகி விட்ட நிலையில் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக நளினி தரப்பு வேதனை தெரிவித்துள்ளது.
நளினியை விடுதலை செய்தால் காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ள நேரிடுமோ என திமுக அஞ்சுவதாக நளினியின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, கடந்த 17.06.91-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி உள்ளிட்ட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
பிறகு, நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சட்டப்படி, ஆயுள் தண்டனைக் கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த
பிறகு, முன்கூட்டியே விடுதலை கோரி விண்ணப்பிக்கலாம்.
அவரது விண்ணப்பத்தை சிறைத்துறை ஐஜி., மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் குழு பரிசீலித்து முடிவு எடுக்கும். அந்தக் குழுவின் பரிந்துரையின்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும்.
இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு நளினி இந்த ஆலோசனைக் குழு முன் விடுதலை கோரி மனு தாக்கல் செய்தார். அவரது நன்னடத்தை குறித்து சிறை அதிகாரியும சான்றிதழ் தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த மனுவை ஆலோசனைக் குழு நிராகரித்து விட்டது. இதையடுத்து நளினி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு சட்டப்படி பரிசீலிக்கப்படவில்லை. இதற்கான ஆலோசனைக் குழுவும் சிறை விதிகளின்படி கூடவில்லை. எனவே, தமிழக அரசு சட்டப்படி ஆலோசனைக் குழுவைக் கூட்டி, நளினியின் மனுவை புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நாள் இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, நீதிமன்ற உத்தரவுப்படி ஆலோசனைக் குழு பரிசீலிக்கும். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்றார்.
ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதுகுறித்து தெரிவித்த நளினியின் வக்கீல்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர், நளினிக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையை அளித்தால், காங்கிரஸ் கட்சியுடன் விரோதம் ஏற்படுமோ என்று முதல்வர் கருணாநிதி பயப்படுவதாலேயே இந்த விஷயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றனர்.