சேலம் அருகே விசைத்தறி கூடத்தில் தீ விபத்து - 20 லட்சம் பொருட்கள் சேதம் !
சேலம்: சேலம் அருகே விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 20 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
சேலம் கொண்டலாம்பட்டி ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சொந்தமாக விசைத்தறி கூடம் உள்ளது. இந்த விசைத்தறி கூடத்தில் மேல் பகுதியில் சிமென்ட் கூரை உள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, விசைத்தறி கூடத்துக்குள் தென்னை ஓலைகள் போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அந்த தென்னை ஓலையில் திடீரென தீப்பிடித்தது. இது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. விசைத்தறி கூடம் தீப்பற்றி எரிந்ததை பார்த்த தேவராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் விசைத்தறி கூடத்தில் விசைத்தறி இயந்திரங்களில் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து விட்டது.
அங்கு இருந்து நூல் மற்றும் ஜவுளி துணிகள், பீரோ உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ 20 லட்சம் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.