புதுச்சேரி தேமுதிக செயலாளர் அசனாவுடன் ரங்கசாமி திடீர் சந்தி்ப்பு - தேமுதிகவில் சேர திட்டம்?

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர் அசனா. அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் ரங்கசாமி சுத்தமாக வேலை செய்யவில்லை. இருப்பினும் நாராயணசாமி வெற்றி பெற்று விட்டார். சமீபத்தில் ரங்கசாமி உள்ளிட்ட அவரது ஆதரவார்களுக்கு காங்கிரஸ் மேலிடம் சூடு வைத்தது.
தற்போது ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் முற்றிலும் ஒதுக்கி, ஓரம் கட்டப்பட்ட நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் காரைக்கால் மற்றும் நாகூரில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் நேற்று ரங்கசாமி கலந்து கொண்டார்.
காரைக்காலுக்கு வந்த அவர் அசனா வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து தனியாகப் பேசினார். பின்னர் அவர் புதுவை கிளம்பிச் சென்றார்.
இந்த திடீர் சந்திப்பு புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசனாவின் மகளுக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் தற்போது வந்து அவரை சந்தித்து ரங்கசாமி பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கும் மேலாக இந்த சந்திப்பில் முக்கியத்துவம் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. தேமுதிகவில் சேர ரங்கசாமி முயல்வதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
ரங்கசாமி தேமுதிகவில் இணைந்தால் அது தேமுதிகவுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் என்பதால் இந்த சந்திப்பு புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications