தனியார் தலையீட்டைக் கண்டித்து மணல் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை: அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். தனியார் மணல் குவாரிகளைத் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஸ்டிரைக் காரணமாக இந்த மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 9000 மணல் லாரிகள் ஓடவில்லை. இந்த மாவட்டங்கள் தவிர வேலூர் மாவட்ட மணல் லாரிகளும் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளன.
மணல் லாரிகள் அனைத்தும் பூந்தமல்லி சாலை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசு சார்பில் மணல் குவாரியில் இருந்து மணல் எடுத்து விற்கப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் 16 இடங்களில் அரசின் மணல் விற்பனை மையங்கள் இருந்தது. ஆனால் இப்போது 3 இடங்களில் மட்டுமே செயல்படுகிறது.
அதே நேரத்தில் கோவையை சேர்ந்த தனியார் ஒருவர் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுத்து விற்பனை செய்கிறார்.
படாளம், திருக்கழுக்குன்றம், மடிப்பாக்கம், தாம்பரம், வானகரம், வேலப்பன்சாவடி, பட்டாபிராம், மாதவரம் செங்குன்றம் உள்பட 11 இடங்களில் தனியாக மணல் யார்டும் அமைத்துள்ளார்.
கனிமவளத்துறை விதிப்படி மாலை 5.30 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும். ஆனால் இவர் 250 லாரிகளில் 24 மணி நேரமும் மணல் எடுத்து வருகிறார்.
அரசு நேரடியாக விற்கும் மணல் 2 யூனிட்டுக்கு ரூ.626. இந்த மணலை வாங்குவதற்கு 2 நாட்கள் வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளது. ஆனால் தனியார் தலையிட்டு மணல் எடுத்து ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 200 வரை விற்கின்றனர்.
கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த தொழிலில் அரசு தனியாரை அனுமதிக்கக்கூடாது. அரசு நிர்ணயித்த விலையில் மணல் வழங்க வேண்டும். எங்கள் கோரிக் கையை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்றார்.