சுவிஸ் தமிழர் பேரவையின் உயிர்க்கும் தமிழீழம் கூட்டம்- கேபியை தலைவராக ஏற்றது
ஜூரிச்: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடந்த உயிர்க்கும் தமிழீழம் நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக, பிரபாகரனின் வழியில் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை செல்வராஜா பத்மநாதன் வழிநடத்துவதை ஏற்றுக்கொள்வதாக உறுதிப்பிரகடனம் எடுக்கப்பட்டது.சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் சுவிஸ் தமிழர் பேரவையால் நேற்று பிற்பகல் 'உயிர்க்கும் தமிழீழம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
1500க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு தொடங்கி மாலை 6:30 வரை நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள், இந்திய மற்றும் இலங்கைப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்ட நிபுணருமான விசுவநாதன் ருத்திரகுமாரன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு கற்பனையாக சிலர் கருதுகின்றனர். ஆனால் அது மிக விரைவில் உருவாக்கம் பெறும். அனைத்துலக மட்டங்களில் அதற்கான ஆதரவு வந்துகொண்டிருக்கிறது என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளில் ஒருவரான கலாநிதி சீவநாயகம் உரையாற்றும்போது தமிழ் மக்கள் தற்போது தமக்கு இடையே உள்ள பகை உணர்வு மற்றும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒருமித்த கருத்துடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
நிறைவுரை மற்றும் உயிர்க்கும் தமிழீழம் உறுதிப் பிரகடனத்தை சுவிஸ் தமிழர் பேரவையின் ஒருங்கிணப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் நிகழ்த்தினார்.