இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அரசு மீது திமுக புகார்
டெல்லி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் திமுக புகார் கூறியது.
மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பி சிவா,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருவது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் கூட ரூ. 36 லட்சம் மதிப்புள்ள படகு மற்றும் வலைகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர்.
தமிழக மீனவர்களை குறிவைத்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவ்வப்போது மத்திய அரசால் உறுதி அளிக்கப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துக் கூடாது என்று தங்களது கடற்படைக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசிடம் இந்திய அரசு இதுவரை கண்டிப்புடன் எடுத்துக் கூறவில்லை என்றார்.
அவருக்கு ஆதரவாக ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்), வெங்கைய்யா நாயுடு (பாஜக) ஆகியோரும் பேசினர்.
விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய அதிமுக உறுப்பினர் எம்பி மலைச்சாமி, அரசியல் காரணங்களால் இந்தப் பிரச்சனையில் திமுக உறுப்பினருடன் இணைந்து குரல் கொடுக்க இயலாது என்றார்.
விவாதத்துக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிருத்திவிராஜ் சவான், இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றார்.
தமிழ மீனவர்கள் நிர்வாண சித்தரவதை..
இந் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
சனிக்கிழமை மாலை ராமேஸ்வரத்திலிருந்து 40 க்கும்
மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது
அங்கு 20க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர்.
அவர்கள் உடைகளை அவிழ்க்கச் சொல்லி நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், பணம், செல்போன், படகில் வைத்திருந்த டார்ச்லைட் போன்றவைகளை பறித்ததோடு வலைகளையும் சேதப்படுத்தினர்.
படகோடு படகை மோதவிட்டு பத்துக்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications