நாடு கடந்த தமிழீழ அரசு: கருணாநிதி-ஜெவுடன் பேசுவோம்: புலிகள்
டெல்லி: நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளோம் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான குழுவின் தலைவரும், சட்ட நிபுணருமான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டெஹல்கா இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழர்களின் இலக்கான தமிழீழத்தை அடைவதற்கான முயற்சியாக நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த முயற்சியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழர்களின் ஆயுத போராட்டத்தை இலங்கை ராணுவம் நசுக்கி விட்டாலும் அவர்களது சுதந்திர தாகத்தை அடக்கிவிட முடியாது.
இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காக போராட முடியாத நிலை உள்ளது. எனவே வெளியில் இருந்து தான் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாட்டின் ஆதரவும் தேவையில்லை. இந்த அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர்களால் தேர்வு செய்யப்படும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களையும், பல்வேறு தரப்பட்ட மக்களையும் சந்தித்து பேசி ஆலோசனை நடத்த உள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியலமைப்பு அவைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த உள்ளோம். இந்தப் பணியை விரைவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசானது சர்வதேச ஆதரவு மற்றும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்துடன் ஒரு அதிகார மையமாக திகழும்.
இந்த அரசு சம அதிகாரங்களை உடைய தமிழர் தேசம் மற்றும் சிங்கள தேசத்தை உருவாக்கும். இந்த முயற்சிக்கு சர்வதேச ஆதரவு மிகவும் முக்கியம். ஜனநாயக கோட்பாடு களுக்கு ஏற்ப இந்த அரசு அமைக்கப்பட இருப்பதால் இதற்கு ஜனநாயக நாடுகள் நிச்சயமாக ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். இதற்கு சில நாடுகளிடம் இருந்து நல்ல பதிலும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications