அழகிரி பேச்சு-நல்லகண்ணுவுக்கு சந்தேகம்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி கூறியிருப்பதன்மூலம் இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் தடுக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்காத அளவுக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அழகிரி பேசியிருக்கிறார். இதன்மூலம் அவர்களது நோக்கம் என்ன என்பது புரிகிறது. என்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தத் தேர்தல் அமைதியாக நடைபெறாது. பணத்தைக் கொடுத்து மக்களை வாங்க திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மத்திய, மாநில தேர்தல் அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொண்டு, தேர்தலில் அராஜகத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் இதை மாற்ற முடியும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஜனநாயக கடமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்கிறது என்றார் நல்லகண்ணு.